'விஜய் பிறந்தநாள் விழாவுக்காக 300 பேருந்துகளை காத்திருக்க வைப்பதா?'- அன்புமணி கண...
விமர்சித்த அதிமுக கவுன்சிலர்; அடிக்க பாய்ந்த திமுக கவுன்சிலர்கள்! - மாநகராட்சி கூட்டத்தில் கடமுடா!
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தின் போது அதிமுகவின் கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ் திமுகவினரை விமர்சனம் வைக்க, வாக்குவாதம் முற்றி திமுகவினர் சதீஷை அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேரமில்லா நேரத்தின் போது அதிமுக கவுன்சிலர் சதீஷ் பேச எழுந்தார். ஆரம்பத்திலேயே 'நான் உங்களை போல கட்சி பற்றியோ அரசியல் பற்றியோ பேசமாட்டேன். மக்கள் பிரச்னைகளை மட்டுமே பேசுவேன்' என திமுக தலைவர் ஸ்டாலினை பற்றி அக்கட்சியின் கவுன்சிலர்கள் புகழ்ந்து பேசியதை விமர்சித்திருந்தார்.
தொடர்ந்து அவரது வார்டு பிரச்னைகளை பற்றி பேசியவர் மீண்டும் 'நான் உங்களை போல கட்சியை பற்றி பேசமாட்டேன்' என்றார். உடனே ஆவேசமான திமுக கவுன்சிலர்கள் கூச்சல் எழுப்பினர். பதிலுக்கு சதீஷூம் கூச்சல் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவையின் இடப்புறம் இருந்து திமுக கவுன்சிலர் ஒருவர் பேப்பர்களை தூக்கி வீச, இன்னொரு திமுக கவுன்சிலர் கவி கணேசன் ஆவேசமாக கத்திக் கொண்டு சதீஷை அடிப்பதை போல இருக்கையை விட்டு எழுந்து ஓடி வந்தார். சதீஷூம் ஆவேசமாக பேச இருவரையும் மற்ற கவுன்சிலர்கள் இழுத்து பிடித்து சமாதானப்படுத்தினர். இந்த சச்சரவால் அவை சில நிமிடங்களுக்கு பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்ந்து பேசிய சதீஷ் சில நிமிடங்களில் உரையை முடித்துவிட்டார். பின்னர் கவி கணேசன் பேசும்போது அரசியல் விஷயங்களை பேச அதற்கு கண்டனம் தெரிவித்துவிட்டு சதீஷ் வெளிநடப்பு செய்தார்.














