விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 23 பேர் பலி, 6 பேர் காயம்!
விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 23 பேர் பலி, 6 பேர் காயம்!
விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் அங்கு பதற்றநிலை நிலவுகிறது.
விருதுநகர் மாவட்டம், வாச்சக்காரப்பட்டி அருகிலுள்ள கட்டனார்பட்டி பகுதியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான "வனஜா" என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
மாவட்ட நிர்வாக அனுமதியுடன் இயங்கி வந்த இந்த பட்டாசு ஆலையில் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
வழக்கம்போல் இன்று பட்டாசு உற்பத்திப்பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, மூலப்பொருட்கள் உராய்வின் காரணமாக திடீரென வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வெடிப்பு தொடர் வெடிப்புகளாக மாறி ஆலையின் சுற்று வட்டாரத்தின் பல பகுதிகளுக்கு பரவியது. இதனால் மூன்றுக்கும் மேற்பட்ட அறைகள் சிதறி சேதமடைந்தன. சில அறைகள் முழுமையாக தரைமட்டமானதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 23 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர்.
மேலும் 6 பேர் கடுமையாக காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளனர்.
தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து கொண்டிருப்பதால், இடிபாடுகளில் மேலும் தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அருகிலுள்ள பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். மேலும், பட்டாசு ஆலையில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெம்பக்கோட்டை அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் அதே மாவட்டத்தில் இவ்வாறு ந பேர் பலியான சம்பவம் பொதுமக்களில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து நடைபெறும் விபத்துகள் குறித்து கடுமையான கண்காணிப்பு தேவைப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது.

















