விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து; 18 பேர் உயிரிழப்பு
விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து; 18 பேர் உயிரிழப்பு
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கட்டனார்பட்டியில், முத்து மாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
இன்று, அந்த பட்டாசு ஆலையில், பட்டாசு தயாரிப்பின்போது திடீரென விபத்து ஏற்பட்டிருக்கிறது.
விபத்தின்போது, இந்தப் பட்டாசு ஆலையிலிருந்து வெடிமருந்துகள் பயங்கர ஒலியுடன் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
10 கி.மீ தூரம் வரை இந்த வெடிப்பின் அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் என அருகிலுள்ள பகுதிகளிலிருந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மேலும், இந்தப் பட்டாசு ஆலையில் இருக்கும் அறைகள் அத்தனையும் விபத்தில் சேதமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது, இந்த விபத்து குறித்துப் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

















