Doctor Vikatan: கோடையிலும் விடாமல் வாட்டும் இருமல்... தேன் சாப்பிட்டால் சரியாகும...
10 ஆண்டுகாலத் திட்டம்: மெல்ல சரிந்த நிதிஷ் குமார் கோட்டை; அரசியல் சதுரங்கத்தில் பாஜக வென்றது எப்படி?
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் இரண்டாவது முதல்வராகவும், பீகார் மாநிலத்தின் முதல் பா.ஜ.க முதல்வராகவும் சாம்ராட் சௌத்ரி இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இதன் மூலம், 'கூட்டணி இணக்கத்தைப் பேணிக்காத்துக்கொண்டே, தன் ஆதிக்கத்தையும் தக்கவைத்துக்கொள்ளவது எப்படி?' என மீண்டும் ஒருமுறை அரசியல் வகுப்பெடுத்திருக்கிறது பா.ஜ.க. அதே நேரம் பா.ஜ.க-வின் இந்த அரசியல் விளையாட்டு ஏற்கெனவே மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது நிகழ்ந்த நிகழ்வுகளையே மனக்கண்ணில் பிரதிபளிக்கிறது.
பீகாரில் பா.ஜ.க காலூன்றிய வரலாறைப் பார்க்கலாம்.

2000-களின் பெரும்பகுதி முழுவதும், பீகார் அரசியலில் பா.ஜ.க மிக அமைதியான கூட்டணியாகவே செயல்பட்டு வந்தது. குறிப்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் நம்பிக்கையை சம்பாதிப்பதையும், அவர் கட்டமைத்த சாதி அடிப்படையிலான கூட்டணி பலத்தையுமே முழுவதும் சார்ந்திருந்தது. 2005, 2010 எனத் தொடர்ந்து தேர்தல்களில் அதிக இடங்களை வென்ற நிதிஷ்குமார்தான் கூட்டணியை முன்னின்று வழிநடத்தினார். 2014-ம் ஆண்டில் இந்த அரசியல் மெல்லச் சிதையத் தொடங்கியது.
மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததைக் காரணம் காட்டி, நிதிஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய முடிவு அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தனித்துப் போட்டியிட்ட JD(U) கட்சி, வெறும் 2 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுத் தடுமாறியது. இதன் தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
2015-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், பா.ஜ.க 25% வாக்குகளைப் பெற்று, 53 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், 'மகாகத்பந்தன்' கூட்டணி கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியை உருவாக்கியிருந்ததால், பா.ஜ.க-வால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற இயலவில்லை.

2017-ம் ஆண்டில் நிதிஷ் குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தபோது, பா.ஜ.க-வின் அரசியல் நிலைப்பாடு முற்றிலும் மாறியிருந்தது. 2020-ம் ஆண்டிற்குள், கூட்டணியில் பா.ஜ.க-வின் ஆதிக்கம் வெளிப்படையாகவே மேலோங்கியது. நிதிஷ் குமார் தலைமையிலான JD(U) வெறும் 43 இடங்களை மட்டுமே வென்ற நிலையில், பா.ஜ.க 74 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் நிதிஷ் குமாரே முதலமைச்சராகத் தொடர்ந்தார்.
2025-ம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த நிதிஷ் குமாரையே முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது. ஆனால், இந்த தேர்தலிலும் JD(U) (85)-வை விட பா.ஜ.க (89) கூடுதல் இடங்களில் வென்றிருந்தது. நிதிஷ் குமார் முதலமைச்சராகத் தொடர்ந்த நிலையில், உள்துறை போன்ற முக்கியத் துறைகளின் கட்டுப்பாட்டை பா.ஜ.க கைப்பற்றியது. இறுதியாக, ஓராண்டுக்குள், சாம்ராட் சௌத்ரியை பீகாரின் முதல் பா.ஜ.க முதலமைச்சராகவும் அறிவித்துவிட்டது.
பீகாருக்கு முன்பு, மகாராஷ்டிராவில்தான் பா.ஜ.க இதேபோன்ற சூத்திரத்தைப் பயன்படுத்தியது. 2022-ல் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவிலிருந்து ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் வெளியேறினார். அப்போது அதிக இடங்கள் வைத்திருந்த பா.ஜ.க, ஃபட்னாவிஸை முதலமைச்சராக்காமல், ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக்கியது. ஃபட்னாவிஸ் வேண்டாவெறுப்பாகத் துணை முதலமைச்சர் ஆனார்.

இதன் மூலம் ஒரு கூட்டணிக் கட்சியை பா.ஜ.க தன் பக்கம் தக்கவைக்கச் செய்த அரசியல் தந்திரம். 2023-ல் சரத் பவாரின் என்.சி.பி (NCP) கட்சியிலிருந்து அஜித் பவார் பிரிந்து வந்து இந்தக் கூட்டணியில் சேர்ந்தார். இப்போது பா.ஜ.க + ஷிண்டே + அஜித் பவார் என "மும்முனை" கூட்டணி (மகாயுதி) உருவானது. இந்தக் கூட்டணி இணைந்து 2024-ல் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. அதில் தன் அசுரபலத்தைக் காண்பித்து 288 இடங்களில் 132 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியானது.
அதேசமயம், கூட்டணிக் கட்சிகளான ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் என்.சி.பி ஆகியவை பா.ஜ.க-வை விட மிகக் குறைவான இடங்களையே பெற்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, "நாங்கள் தான் அதிக இடங்கள் வைத்திருக்கிறோம், எனவே முதலமைச்சர் பதவி எங்களுக்கே வேண்டும்" என்று பா.ஜ.க கறாராகச் சொன்னது. இதன்படி, தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார். முதலமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் பதவிக்கு "இறங்கி" வர வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டது.

மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், பா.ஜ.க அதிகாரத்தைக் குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. உள்துறை, நிதி மற்றும் சட்டம் போன்ற முக்கியத் துறைகள் முதலமைச்சர் அலுவலகத்தால் தக்கவைக்கப்பட்டன. அதன் மூலம், துணை முதலமைச்சராக பணியாற்றிய ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகிய இருவரின் அதிகாரமும் குறைக்கப்பட்டது. அஜித் பவாரின் மறைவுக்குப் பிறகு, மகாராஷ்டிர அமைச்சரவையில் அவரின் மனைவி சுனேத்ரா பவாருக்கு அவரது பதவி வழங்கப்பட்டது. பா.ஜ.க-வின் தேர்தல் பலம் அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியது.
பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டிலும், கூட்டணிகளுக்குள் பா.ஜ.க-வின் எழுச்சி, கூட்டணியை உடைக்காமல் அதை எப்படி தன்வசப்படுத்துவது என்பதற்கான அரசியல் உக்திகளை செயல்படுத்தியிருக்கிறது. தன் கட்சியை விரிவுபடுத்தி, அதே நேரத்தில் தனது கூட்டணிக் கட்சிகளுக்கான முக்கியத்துவத்தைக் குறைப்பதன் மூலம், கூட்டணிகள் சமரசத்திற்கான பாதையல்ல, ஆதிக்கத்திற்கான பாதை என்பதை பா.ஜ.க நிரூபித்திருக்கிறது.
மாநிலக் கட்சிகளின் தலைவர்களை உள்ளிருந்தே எவ்வாறு "இயலாமைக்குள் தள்ளுவது" என்பது வெறும் அரசியல் தந்திரம் மட்டுமல்ல, கடந்த பத்தாண்டுகளில் பா.ஜ.க செம்மைப்படுத்திய ஒரு நுட்பமான தேர்தல் விஞ்ஞானம்.

பீகாரில் சாம்ராட் சௌத்ரி முதல்வராகப் பதவியேற்றபோது 2010-ல் பா.ஜ.க-வுக்கு சவால் விடும் வீரியமிக்க கட்சியாக இருந்த JD(U) இப்போது பா.ஜ.க-வின் அமைப்பு ரீதியான ஆதரவைச் சார்ந்தே தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் கட்சியாக மாறியிருக்கிறது.
'நிதிஷ் குமாருக்குப் பிறகு யார்?' என்ற கேள்விக்கு இப்போதுவரை சொல்லிக்கொள்ளும்படி யாரும் இல்லை என்ற நிலைக்கு வந்திருக்கிறது JD(U). நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் அடுத்து இந்தக் கட்சியை எப்படி கொண்டு செல்வார் என்பதும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது.

















