அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2026 Live | Alanganallur Jallikattu
10 ஆண்டுகால ஸ்கெட்ச்: ஷிண்டே உதவியோடு ஒரே கல்லில் தாக்கரே, பவார் பிராண்டை காலி செய்த பா.ஜ.க!
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் நேற்று முன்தினம் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டதில் மும்பை மாநகராட்சியை பா.ஜ.க கூட்டணி பிடித்துள்ளது. மும்பையை எப்படியும் தனித்து பிடித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க முயற்சி செய்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 227 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில் 89 வார்டில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இத்தேர்தலில் மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் இருந்த 8 மாநகராட்சிகளில் 6 மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி இருக்கிறது.
மும்பையை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஆனால் அவர்களது முயற்சி பலனலிக்கவில்லை.

மும்பை மட்டுமல்லாது மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளில் 24 மாநகராட்சியை பா.ஜ.கவும், அதன் கூட்டணி கட்சியும் சேர்ந்து பிடித்துள்ளன.
50 ஆண்டு பிராண்ட உடைத்த பா.ஜ.க
மகாராஷ்டிரா அரசியலில் தாக்கரே மற்றும் பவார் பிராண்ட் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. ஆனால் அந்த இரு சக்திகளை அழிக்க பா.ஜ.க முதல் கட்டமாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் உதவியோடு சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை இரண்டாக உடைத்தது. இதற்காக பா.ஜ.க கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான உழைத்தது. அதோடு சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சின்னம் மற்றும் பெயர்களை வைத்திருந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாரை பா.ஜ.க தங்களது கூட்டணியில் சேர்த்துக்கொண்டது.
இது தாக்கரே மற்றும் பவார் பிராண்டை அடியோடு ஒழிக்க பா.ஜ.கவிற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் தாக்கரே மற்றும் சரத் பவார் கட்சிகள் படுதோல்வியை சந்தித்தது. இப்போது இத்தேர்தலில் பா.ஜ.க எதிர்பார்த்தது போன்று மும்பை, புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிகளில் சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. மகாராஷ்டிரா முழுவதுமே பவார் பிராண்ட் தோல்வியை சந்தித்துள்ளது.
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதிலும் அஜித் பவார் கட்சி தனித்து போட்டியிட்டது. இதே போன்று சரத் பவார் கட்சியும் தனித்து போட்டியிட்டது. இரண்டு பேருமே படுதோல்வியை சந்தித்துள்ளனர். இதே போன்று ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு சொர்ப்ப இடங்களை கொடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டு மாநிலம் முழுவதும் பா.ஜ.க போட்டியிட்டது. அதுவும் உத்தவ் தாக்கரே கட்சி போட்டியிடும் இடங்களில் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு இடங்களை பா.ஜ.க ஒதுக்கியது. இதனால் சிவசேனா அனுதாபிகள் எது உண்மையான சிவசேனா என்ற குழப்பத்திற்கு வந்தனர்.
கடந்த 50 ஆண்டுகளாக தாக்கரே பிராண்ட் மராத்தியர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தது. இதே போன்று சரத் பவார் மாநிலம் முழுவதும் குறிப்பாக மேற்கு மகாராஷ்டிராவில் சிறந்து விளங்கும் கூட்டுறவு துறையில் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.

2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் பிளவுபடுவதற்கு முன்பே, மேற்கு மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பாக விளங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், வங்கிகள் மற்றும் பால் சங்கங்களில் பா.ஜ.க ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. பவாரின் பல விசுவாசிகளும், கூட்டுறவுத் துறையின் மீது ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் தலைவர்களும் கூட பா.ஜ.க.வுக்கு மாறினர். இது சரத் பவாருக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது.
இப்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டு ஒன்றாக சேர வேண்டிய நிலைக்கு தள்ளி இருக்கிறது. அஜித் பவாரும், சரத் பவாரும் புனே, பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிறகும் அவர்களால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.
பா.ஜ.க நினைத்தால் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடும் என்பதை அஜித் பவார் புரிந்து கொள்ள தொடங்கி இருப்பதாகவும், எனவேதான் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை தனது கட்சியோடு இணைக்க அஜித்பவார் ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அஜித் பவாரால் ஒரு மாநகராட்சியை கூட பிடிக்க முடியவில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பர்பானி மாநகராட்சியை பிடித்துள்ளது.














