இனி இலவசம் இல்லையா? மாசம் ₹99! வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமுக்கு வரும் 'Plus' சந்தா -...
102 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட ஆகாஷ் டெலிசன் உடல்; கதறித் துடித்த பெற்றோர்!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த ரஜேஷ்கண்ணன் - ஆனந்தி தம்பதியினரின் மகன் ஆகாஷ் டெலிசன் (26), குற்றவழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணைக்குச் சென்றார்.
அதையடுத்து ஆகாஷ் டெலிசனுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறி, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில், ஆகாஷ் டெலிசன் உடலில் மொத்தம் 28 வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் இருப்பது தெரியவந்தது.
ஆகாஷ் மரணம் தொடர்பாக கொலை வழக்கு மற்றும் எஸ்.சி - எஸ்டி வன்கொடுமை தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை உதவி ஆய்வாளர் குகன், சிவகங்கை நகர் தலைமைக் காவலர் தெய்வேந்திரன், சிப்காட் தலைமைக் காவலர் சரத்குமார், மானாமதுரை முதல் நிலைக் காவலர் காளீஸ்வரன், திருப்புவனம் முதல் நிலைக் காவலர் மனோகரன் ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஆகாஷுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், காவல் நிலைய பணியில் இருந்த காவலர்கள் என 20-க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறை விசாரணை நடத்தியது.
இந்நிலையில் ஆகாஷ் டெலிசனின் வழக்கில் காவல்துறையினர் 6 பேரையும் கைதுசெய்ய வேண்டும், 50 லட்ச ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எஸ்.சி - எஸ்.டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆகாஷின் தந்தை ராஜேஷ்க ண்ணன் மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனிடையே ஆகாஷ் டெலிசனின் உடலை வாங்கமறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதன் காரணமாக கடந்த 102 நாள்களாக ஆகாஷ் டெலிசனின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைப் பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், ஆகாஷ் டெலிசனின் உடலை குடும்பத்தினர் வாங்கி அடக்கம் செய்ய நீதிமன்றம் கூறிய பின்னரும், தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர்.

இதனிடையே நேற்று மாலை மனு மீதான விசாரணையின்போது ஆகாஷ் டெலிசனின் உடலை மாவட்ட ஆட்சியர், ஆணையர், மருத்துவமனை முதல்வர் ஏற்பாட்டில் கண்ணியத்துடன் அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது, நீதிமன்றம்.
இன்று காலை கோட்டாட்சியர் கருணாகரன், அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவ அலுவலர் சரவணன் ஆகியோர் முன்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைப் பிணவறை பகுதியில் உள்ள ஆகாஷ் டெலிசனின் உடல் வீடியோ மற்றும் புகைப்படம் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆகாஷ் டெலிசனின் உடலை தத்தனேரி மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு முன்பாக ஆகாஷ் டெலிசனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அப்போது குடும்பத்தினர் கூச்சலிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆகாஷ் டெலிசனின் உடல் ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை தத்தனேரி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின் கோட்டாட்சியர் கருணாகரன் ஆகாஷ் டெலிசனின் உடலுக்கு மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆகாஷ் டெலிசனின் பெற்றோர் தத்தனேரி மயானத்திற்கு அழைத்துவரப்பட்டு பின்னர் ஆகாஷ் டெலிசனின் உடலைப் பார்த்துக் கதறி அழுதனர்.

உடலை தகனம் செய்வதற்கு முன்பு, ஆகாஷ் டெலிசனின் உடல் தானா என்பதைப் பார்ப்பதற்காக கையில் ஆறு விரல்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதிகாரிகள் கைவிரல்களைக் காட்டினர்.
பின்னர் ஆகாஷ் டெலிசனின் உடல், தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
ஆகாஷ் டெலிசனின் தாயார் ஆனந்தி, காவல்துறையினரைப் பார்த்து, ``ஆகாஷைக் கொன்றவர்களைக் கைதுசெய்வதற்கு வக்கில்லை, என் மகனைக் கொன்றவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்... சாவுக்குக் காரணமானவர்கள் நிச்சயம் அனுபவிப்பார்கள்" எனக் கூறி கதறி அழுதபடி காவல்துறையை நோக்கி மண்ணைத் தூற்றி, கொதிப்பை வெளிப்படுத்திச் சென்றார்.
102 நாள்களுக்கு பின்பு ஆகாஷ் டெலிசனின் உடலானது உயர் நீதிமன்ற உத்தரவுபடி தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
















