ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணம்... காதலனுடன் சேர்ந்து திட்டம்; மருத்துவமனையில் வைத்து ...
`விளையாட்டா? அரசியலா?' - உலகக் கோப்பையில் 'ஒடுக்கப்படும் அணி' என ஆதங்கம் தெரிவிக்கும் ஈரான்!
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் 'ஜி' பிரிவின் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 2–2 என்ற கணக்கில் டிரா செய்த பிறகு, ஈரான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமீர் காலேனோய் மற்றும் கேப்டன் மெஹ்தி தாரெமி ஆகியோர் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து FIFA மற்றும் அமெரிக்க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
தங்களது தங்குமிடம் மற்றும் பயண ஏற்பாடுகளில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தடைகளால், இந்த உலகக் கோப்பைத் தொடரிலேயே தங்களது அணிதான் மிகவும் ஒடுக்கப்பட்ட அணியாக மாறியுள்ளது என்று அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் கடுமையான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில்தான் ஈரான் அணி இந்த உலகக் கோப்பையில் பங்கேற்று வருகிறது.

பாதுகாப்பு மற்றும் விசா சிக்கல்கள் காரணமாக அமெரிக்காவில் தங்களது பயிற்சி முகாமை அமைக்க முடியாமல், எல்லையைக் கடந்து மெக்சிகோவின் டிஜுவானா நகரில் ஈரான் அணி முகாம் அமைக்க நேரிட்டது. அங்கிருந்து போட்டி நடக்கும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு வருவதற்கு மட்டுமே விசா கெடுபிடிகளால் ஐந்து மணி நேரம் வீணடிக்கப்பட்டதாகக் கேப்டன் மெஹ்தி தாரெமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி, விசா மறுப்பால் ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மெஹ்தி தாஜ், முக்கிய மேலாளர்கள், மற்றும் ஊடக அதிகாரிகள் எனப் பதினொரு ஊழியர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாமல் மெக்சிகோவிலேயே தவித்து வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்த அடுத்த கணமே ஈரான் அணியை உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேறி மீண்டும் மெக்சிகோவிற்கே திரும்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலஸில் தங்கி மறுநாள் மதியம் புறப்படத் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்றே தெரியவில்லை என்றும், யாரோ பின்னணியில் இருந்து தங்களை முடக்கச் சதி செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போட்டிக்குப் பின் ஈரான் அணியினரை நேரில் சென்று சந்தித்த FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்து கொள்வதாகவும், உலகமே உற்று நோக்கும் இந்தத் தொடரில் அவர்கள் மனவலிமையோடு வரலாற்றைப் படைக்க வேண்டும் என்றும் வீரர்களைத் தேற்றியுள்ளார்.
எனினும், வரும் ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியத்திற்கு எதிராக லாஸ் ஏஞ்சலஸிலேயே அடுத்த போட்டி நடக்கவிருக்கும் சூழலில், ஈரான் அணி மீண்டும் மெக்சிகோவிற்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பது, விளையாட்டுத் துறையிலும் எந்தளவுக்கு உலக அரசியல் நிலவரங்கள தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்த்துகிறது.!



















