மாணவர்கள் கையில் கயிறு: "இந்தச் சமூகத்திற்கு இந்தக் கலர் எனத் தூண்டிவிடுகிறார்கள...
FIFA 2026: ஆஸ்திரேலிய அணியில் களம் இறங்கி சாதனை படைத்த இந்திய வம்சாவளி நாயகன்; யார் இந்த நிஷான்?
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் தொடக்க ஆட்டத்திலேயே ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு மாபெரும் ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது.
சர்வதேச கால்பந்து அரங்கில் மிகவும் பலம் வாய்ந்த அணியாகக் கருதப்பட்ட துருக்கியை, ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.
இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை மேடைக்குத் திரும்பிய துருக்கியின் கனவை உடைக்கும் வகையில், ஆஸ்திரேலிய வீரர் நெஸ்டோரி இரான்குண்டா ஒரு சூப்பர் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, கானர் மெட்காஃப் தூரத்திலிருந்து பந்தை மின்னல் வேகத்தில் வலைக்குள் செலுத்தி ஆஸ்திரேலியாவின் அசாத்திய வெற்றியை அசைக்க முடியாதபடி உறுதி செய்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில்தான் இந்திய வம்சாவளியினருக்கு ஒரு மாபெரும் பெருமிதம் தேடிவந்தது. ஆஸ்திரேலிய அணியின் இருபத்தைந்து வயது இளம் வீரரான நிஷான் வேலுப்பிள்ளை, போட்டியின் மாற்று வீரராக மைதானத்திற்குள் களம் இறங்கினார்.
இதன் மூலம், 2026 ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடிய முதல் இந்திய வம்சாவளி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.
மெல்போர்னில் பிறந்த இவரது தந்தை இலங்கைத் தமிழ் பின்னணியைக் கொண்டவர் என்பதால், உலகக் கோப்பை வரலாற்றில் களம் கண்ட முதல் இலங்கைத் தமிழ் வம்சாவளி வீரர் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது.
இவரது தாயாரான ஜிலியன் வேலுப்பிள்ளை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் ஓர் ஆங்கிலோ-இந்தியப் பெண்மணி ஆவார். இவருடைய முன்னோர்கள் ஐரோப்பிய மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவருடைய குடும்பம் பிற்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்தது.
போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இரண்டு கோல் அடித்த் முன்னிலையில் இருந்ததால், அணியின் பயிற்சியாளர் டோனி போபோவிக் நிஷானை அவரது அதிரடி ஆட்டத்தை விட தற்காப்புப் பணிகளில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

அதற்கேற்ப நிஷான் தனது தற்காப்பு ஆட்டத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி, துருக்கி அணியின் பலமான முற்போக்குத் தாக்குதல்களை முறியடிக்க பெரிதும் உதவினார்.
மெல்போர்ன் விக்டரி கிளப்பின் அகாடமியில் வளர்ந்து, 2024 ஆண்டு சீனாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் அறிமுகமாகி, களம் இறங்கிய ஏழே நிமிடங்களில் கோல் அடித்து அசத்திய நிஷான் வேலுப்பிள்ளையின் இந்த அசுர வளர்ச்சி, உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் தொடக்கத்திலேயே தமிழ் மற்றும் இந்திய ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத கொண்டாட்டமாக மாறியுள்ளது.

















