TVK : 'மாமல்லபுரத்தில் இஃப்தார் விருந்தில் கலந்துகொள்ளும் விஜய்!' - தவெக அப்டேட்
150 அறைகள் கொண்ட கவடியார் அரண்மனை... ரூ.2 கோடி மதிப்புள்ள மதிப்புமிக்க நகைகள் கொள்ளை - நடந்தது என்ன?
கேரளம் மாநிலத்தில் புகழ்பெற்ற மன்னர்களாக விளங்கியவர்கள் திருவிதாங்கூர் மன்னர்கள். திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் இன்றளவும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் வசம் உள்ளது. மன்னர் குடும்பத்தின் வாரிசுகள் திருவனந்தபுரத்தில் உள்ள கவடியார் கொட்டாரத்தில் (கவடியார் அரண்மனை) வசித்து வருகின்றனர்.
150 அறைகள் கொண்ட கவடியார் அரண்மனை மிகுந்த பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளது. இந்த அரண்மனையில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான 40 பவுனுக்கும் அதிகமான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கொட்டாரத்தின் மூத்த உறுப்பினர் அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாய் கேரள டி.ஜி.பி-யிடம் புகார் அளித்துள்ளார்.
அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாயின் படுக்கை அறையில் உள்ள பீரோவில் உள்ள இரும்புப்பெட்டியில் இருந்து நகைகள் திருடப்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் பேரூர்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல்போன நகைகள் குறித்த விபரங்களும் வெளியாகி உள்ளன.

அதில், பத்மநாபசுவாமி உருவம் பொறித்த தங்கப் பதக்கம் மற்றும் சங்கிலி (1 பவுன்),
ஆரஞ்சு நிறப் பவளம் மற்றும் தங்க முத்துகள் பதிக்கப்பட்ட சங்கிலி (அரை பவுன்),
பிச்சிப்பூ மொட்டு வடிவிலான தங்கக் கொலுசு (3 பவுன்),
கருப்பு மற்றும் தங்க முத்துகள் கலந்த கொலுசு (2 பவுன்),
அகலமான இலை வடிவிலான இரண்டு வளையல்கள் (4 பவுன்),
அகலம் குறைந்த 2 தங்க முறுக்கு வளையல்கள் (3 பவுன்),
சிவப்பு கல் பதித்த பெரிய இரண்டு கம்மல்கள் (3 பவுன்),
பச்சை எனாமல் இரண்டு இலைகள் மற்றும் வெள்ளை எனாமல் சங்கு பதித்த தங்கப் பதக்கம் மற்றும் தங்க முறுக்குச் சங்கிலி (2.5 பவுன்),
தங்கக் குழி மின்னுமாலை (5 பவுன்),
எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பச்சைக்கல் பதித்த நாகபடம் கம்மல்,
மாலை மற்றும் பதக்கம் (4 பவுன்),
தங்கக் கம்மல் மற்றும் இலை வடிவிலான மாட்டி (2 பவுன்),
ரூபி கற்கள் மற்றும் வைரங்கள் பதித்த அகலமான 2 வளையல்கள் (6 பவுன்),
ஒரு பவுன் வீதம் உள்ள 5 குதிரைப்பவுன் நாணயங்கள் என 40 பவுனுக்கும் அதிகமான நகைகள் திருடப்படுள்ளதாக தெரியவந்துள்ளது.
40 பவுன் நகைகள் என்றாலும், அதில் இருக்கும் முத்துகள், பவளங்கள் எல்லாம் சேர்த்து சந்தை மதிப்பு கணக்கிடப்படும்போது அவை இரண்டு கோடி ரூபாய் வரை விலைமதிப்பு கொண்டவையாகும். அரண்மனையில் இருந்து மிகவும் விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமே திருடப்பட்டுள்ளன.

2025-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் இந்தத் திருட்டு நடந்துள்ளது. நவம்பர் மாதம் பெங்களூர் செல்வதற்காக அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாய் பீரோவை திறந்து பார்த்தபோதே திருட்டு நடந்த விஷயம் தெரியவந்தது. அதற்கு பத்து நாட்களுக்கு முன்பு வரை அந்த ஆபரணங்கள் பெட்டியில் இருந்துள்ளன.
அரண்மனையில் உள்ளவர்கள் யாராவது எடுத்திருக்கலாம் என விசாரித்தபோது, யாரும் எடுக்கவில்லை என கூறியுள்ளனர். அரண்மனை முழுவதும் தேடியும் கிடைக்காததாலேயே புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருட்டு நடந்த அறைக்குள் நுழைய அனைவருக்கும் அனுமதி இல்லை. அனுமதி உள்ளவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரண்மனையைப் பற்றி துல்லியமாகத் தெரிந்தவர்களே இந்தத் திருட்டின் பின்னணியில் இருப்பதாக போலீஸார் கருதுகின்றனர். அரண்மனைக்கு உள்ளேயே இருப்பவர்கள் யாராவது திருடி இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. ஊழியர்கள் உள்ளிட்டோரை மையப்படுத்தி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
150 அறைகள் கொண்ட அரண்மனையில் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும் பீரோ உட்பட அனைத்து விவரங்களும் தெரிந்தவர்களால்தான் எளிதில் திருட முடியும் என்கிறார்கள். ஒருவேளை வெளியாட்கள் திருடியிருந்தால் அவர்களுக்கு அரண்மனையிலிருந்து யாராவது உதவியிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். அரண்மனை சார்ந்த பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் விசாரிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சம்பம் நடந்து சுமார் 3 மாதங்களுக்கு மேல் ஆவதால் கைரேகை உள்ளிட்ட பதிவுகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.




















