அடிக்கடி மாறும் தலைவர்கள்; 20% எம்பி-க்கள் நினைத்தால் பிரதமர் காலி... இங்கிலாந்த...
50% விலை குறைந்த பிட்காயின்... திகைத்து நிற்கும் முதலீட்டாளர்கள்!
இந்தியாவில் பிட்காயினில் பணம் போட்டவர்கள் அனைவரும், 'ஏன்தான் இதில் பணம் போட்டோமோ! 50% நஷ்டம் வந்துவிட்டதே' என்று பரிதவித்துக்கொண்டு இருக்கிறார்கள். பிட்காயினின் விலை இப்படி இறங்கிக்கொண்டே இருந்தால், அதனால் ஏற்படும் நஷ்டத்தை எப்படித்தான் சமாளிக்கப் போகிறோமோ என்று தெரியாமல் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்!
என்னாச்சு பிட்காயினுக்கு, ஏன் இதன் விலை இப்படி குறைந்திருக்கிறது என்கிற கேள்விகளுக்கான பதிலைப் பார்ப்போம்.

கடந்த ஆண்டு அக்டோபார் மாதத் தொடக்கத்தில் பிட்காயினின் விலை வரலாறு காணாத அளவுக்கு 1.23 லட்சம் அமெரிக்க டாலர்கள் என வர்த்தகமானது. (இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு பிட்காயினின் விலை ரூ.1.10 கோடி என்கிற அளவில் வர்த்தகமானது!)
அன்று முதல் குறையத் தொடங்கிய பிட்காயினின் விலை, தற்போது 62,786 டாலர் என்கிற அளவில் வர்த்தகம் ஆகிறது. இது பிட்காயினின் உச்ச விலையிலிருந்து 40% குறைவு. (இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு பிட்காயினின் விலை தற்போது ரூ.59.30 லட்சம் என்கிற அளவில் வர்த்தகமானது!)
உலகச் சந்தையில் பிட்காயினின் விலை தொடர்ந்து இறங்கி வருவதால், இந்தியாவிலும் பிட்காயினின் விலை இறங்கி வர்த்தகமாகிறது.
பிட்காயினின் விலை தொடர்ந்து குறைந்து வருவதற்கு என்ன காரணம்? பல காரணங்களை சொல்கிறார்கள்.
முதல் காரணம், சில முக்கியமான பெரிய நிறுவனங்கள் வைத்திருந்த பிட்காயின்களை விற்றதால், விலை குறைந்துள்ளது. உதாரணமாக, ஸ்ட்ராட்டஜி இங்க் நிறுவனத்தின் வசமிருந்த பிட்காயினை கணிசமாகக் குறைத்துக்கொண்டுள்ளது.
இரண்டாவது காரணம், அமெரிக்க கடன் சந்தை பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருமானமானது, சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. எனவே, பிட்காயினில் கிடைத்த லாபத்தை எடுத்து கடன் சந்தை பத்திரங்களில் போட்டிருக்கிறார்கள் அமெரிக்க முதலீட்டாளர்கள். பிட்காயினின் விலை இன்னும் நன்கு குறைந்த பிறகு கடன் பத்திரங்களில் இருக்கும் பணத்தை எடுத்து மீண்டும் பிட்காயினில் முதலீடு செய்துகொள்ளலாம் என்பது அவர்களின் திட்டமாக இருக்கிறது.

மூன்றாவது காரணம், பிட்காயின் இ.டி.எஃப்-லிருந்து முதலீடு வெளியேறிக்கொண்டே இருக்கிறது. புதிய முதலீட்டுக்கான தேவை என்பது உருவாகாததால், விற்பனை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
நான்காவது காரணம், கடந்த ஓராண்டு காலமாக ஏ.ஐ துறையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக, அந்தத் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏ.ஐ பங்குகளின் விலை நன்கு உயர்ந்திருப்பதால், பிட்காயினில் போட்ட பணத்தைத் திரும்ப எடுத்து, ஏ.ஐ பங்குகளில் முதலீடு செய்து வருகிறார்கள் முதலீட்டாளர்கள்.
பிட்காயினின் விலை தொடர்ந்து இறங்கி வருவதால், இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள் அதில் பணம் போட்ட முதலீட்டாளர்கள். பிட்காயினின் விலை ஏற்ற, இறக்கம் என்பது டிமாண்ட் - சப்ளையைப் பொறுத்ததாகவே இருக்கிறது. கிரிப்டோ கரன்ஸிகளுக்கான தேவை திடீரென உருவாகும்போது, அதன் விலை அதிரடியாக உயர்கிறது. தேவை இல்லாதபோது, விலை மிகப் பெரிய அளவில் குறைகிறது.
இப்படிப் பெரிய அளவில் விலை உயரவும் இறங்கவும் செய்வதால், கிரிப்டோ கரன்ஸி என்பது ரிஸ்க் மிகுந்த முதலீடாகவே இருக்கிறது. குறுகிய காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிற எதிர்பார்ப்பில் இதில் பணம் போட்டவர்கள், லாபத்தைவிட நஷ்டத்தையே அதிகம் கண்டிருக்கிறார்கள். எனவே, குறுகிய கால நோக்கில் இதில் பணம் போடவே கூடாது. தவிர, அதிகமான விலையில் கிரிப்டோ கரன்ஸியை வாங்கவே கூடாது. 40% முதல் 50% விலை இறங்கியபின் இதில் பணத்தைப் போட்டால், அதிக அளவில் நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு குறைவு.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவர் முதலீடு செய்ய நினைக்கும் தொகையில் மொத்தப் பணத்தையும் கிரிப்டோ கரன்ஸியிலேயே போட்டு வைப்பது கூடவே கூடாது. ஒருவரிடம் இருக்கும் 100% முதலீட்டில் 2% பணத்தை மட்டுமே கிரிப்டோ கரன்ஸியில் போடலாம். இந்த 2% முதலீட்டுக்கு எவ்வளவு லாபம் கிடைக்குமோ அந்த அளவுக்கு கிடைத்தால் போதும் என்று இருந்துவிடலாம். ஒருவேளை, நஷ்டம் வந்தால், இந்த 2% பணத்தை இழந்தாலும் பிரச்னை இல்லை என்று இருந்துவிடலாம்!
பிட்காயினின் விலை 40% வரை இறங்கி இருக்கும் இந்த நேரத்தில், அதில் பணம் போட்ட நீங்கள் இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி!
முதலீட்டு ஆலோசனை வேண்டுமா?
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
Labham Youtube Channel: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!



















