`மருத்துவமனைக்கு வெள்ளை கோட்டுடன் சென்றதற்கு காரணம் இதுதான்!' - தவெக நிர்வாகி வா...
59 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ்; `அந்த' 2 எம்.எல்.ஏ-க்கள் யார்?!
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாகப் பங்கேற்கிறது. நாளை (வியாழக்கிழமை) நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டின் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 1967-ம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 59 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சரவையில் இடம்பிடிப்பது இதுவே முதல்முறை என்பதால், இம்மாற்றம் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக அரசில் காங்கிரஸ் கட்சிக்கு இரு அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட உள்ள நிலையில், அதில் பங்கேற்கும் எம்.எல்.ஏ-க்களின் பெயர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிகாரபூர்வமாக இறுதி செய்துள்ளது. அதன்படி, கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் மற்றும் மேலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் விஸ்வநாதன் ஆகிய இருவரும் நாளை அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவுள்ளனர்.
இவர்களின் பெயர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இதற்கான அதிகாரபூர்வத் தகவலை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பரப்புரைகளின் போதே, ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தார். தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குச் சில இடங்கள் குறைவாக இருந்த சூழலில், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்று, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையையும் நிரூபித்தார்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸுக்கு விஜய் இடமளித்துள்ளார். கடந்த 1967-ல் பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்ததற்குப் பிறகு, திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்ததில்லை. தற்போது 59 ஆண்டுகளுக்குப் பிறகு தவெக ஆட்சியில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதால், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. நாளை காலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஆளுநர் இவர்களுக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.














