கத்தார் எரிவாயு முனையம் மீது தாக்குதல்: உலகளவில் எகிறும் எரிசக்தி விலை - இந்தியா...
'6 சீட்டுனா பேசுறதுக்கு கூப்பிடுங்க, இல்லன்னா..!'- கறார் சி.பி.எம்; இறங்கி வராத திமுக? பின்னணி என்ன?
திமுக - சி.பி.எம் இடையேயான தொகுதி பங்கீட்டில் இழுபறி ஓய்ந்தபாடில்லை. மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகளை முடித்த பிறகு, '6 க்கு கீழ குறைச்சுக்கவே மாட்டோம்!' என சி.பி.எம் கறாராக நிற்கிறது. திமுகவுக்கும் இறங்கி வர மனமில்லை. பின்னணியில் என்னதான் நடக்கிறது?

'கூட்டணிக்குள் புதிதாக தேமுதிக, மநீம போன்ற கட்சிகள் வந்திருப்பதால் அதை காரணம் காட்டியே மற்ற கட்சிகளுக்கான சீட்டில் கை வைக்க திமுக திட்டமிட்டது. திமுகவின் திட்டத்துக்கு முதலில் இரையானது மதிமுக. கடந்த முறையை விட இரண்டு சீட்டுகளை குறைத்துக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதே பாணியில் இரண்டு கம்யூனிஸ்ட்களையும் 4 சீட்டுகளுக்குள் முடிக்க நினைத்தனர். தோழர்கள் முரண்டு பிடிக்கவே 5 சீட்டுகள் என டீலை முடிக்க நினைத்தது திமுக. இந்திய கம்யூனிஸ்ட் ஒத்து வந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒத்துக்கொள்ளவில்லை. இந்திய கம்யூனிஸ்ட்டை மட்டும் முதலில் பேசி முடித்து கையெழுத்து வாங்கி மார்க்சிஸ்ட்களுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றது திமுக. ஆனால், மார்க்சிஸ்ட்டுகள் உறுதியாக நின்று விட்டனர். 6 க்கு அதிகமாக கொடுத்தால் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். இல்லையேல் பேச்சுவார்த்தைக்கே அழைக்காதீர்கள் என திமுகவிடம் கறாராக கூறிவிட்டனர்' என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
சி.பி.ஐ க்கு 5 சீட்டுகளை கொடுத்துவிட்டு சி.பி.எம் க்கு மட்டும் எப்படி 6+ சீட்டுகளை கொடுப்பது என்கிற தர்ம சங்கட வலையையும் அறிவாலயம் விரித்து பார்த்திருக்கிறது. அதிலும் சி.பி.எம் சிக்கவில்லை என்கின்றனர். இதுசம்பந்தமாக பேசும் தோழர்கள் சிலர், '2006 இல் இதே திமுக கூட்டணியில் சி.பி.ஐ 10 தொகுதிகளிலும் சி.பி.எம் 13 தொகுதிகளிலும் நின்றிருக்கிறது. இரண்டு கட்சிகளும் வேறு வேறு. இரு கட்சிகளுக்கும் ஒரே எண்ணிக்கையில் சீட் என்பதே எங்களை குறைந்த எண்ணிக்கையில் முடக்குவதற்கான யுக்திதான்.

நாங்கள் 6+ கேட்டோம். இப்போது கடந்த முறை கொடுத்த அதே 6 சீட்டுகளுக்கு கூட ஒத்துக்கொள்கிறோம் என்கிறோம். ஆனால், திமுக 6 சீட்டுகளுக்கு கூட இன்னமும் உத்தரவாதம் கொடுக்கவில்லை. இனி பேச்சுவார்த்தைக்கு செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. 23 ஆம் தேதி மாநில நிர்வாகக்குழு கூட்டம் இருக்கிறது. அதற்குள் சுமுகமாக முடிய வேண்டும். இல்லையேல் 23 ஆம் தேதி நாங்கள் ஒரு இறுதி முடிவை எடுப்போம்' என்கின்றனர்.
என்ன செய்யப்போகிறார் முதல்வர் ஸ்டாலின்?













