T20 World Cup: 20 அணிகள்; இந்தியாவில் 5 மைதானங்கள்; ஜியோ ஸ்டார் ஒளிபரப்பு - உலகக...
'80 ஏக்கரில் திடல், 5 லட்சம் பேர் டார்கெட்; வேட்பாளர்கள் அறிமுகம்'- NTK மாநாடும் சீமானின் வியூகமும்!
ஆடு, மாடு, தண்ணீர், கடல் உள்ளிட்ட சூழலியல் மாநாடுகளை நடத்திய நாம் தமிழர் கட்சி, வரும் பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாட்டை நடத்த ஆயத்தமாகி வருகிறது. கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில் முழு நேரமும் மாநாட்டுக்கான தயாரிப்பு பணிகள்தான் போய்க் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். நாமும் விசாரித்தோம்.

"விஜய்யின் பிரசாரக் கூட்டங்களுக்கு வரும் இளைஞர்கள் பட்டாளத்தைப் பார்த்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்குவங்கியில் சேதாரம் ஏற்படும்" என ஒருமித்த குரலில் ஒலிக்கிறார்கள்... அரசியல் பார்வையாளர்களும் வியூகப் புள்ளிகளும். ஆனால் வாக்குவங்கி நிச்சயமாக உயரும் என்பதிலும், விஜய் கட்சியைவிட நா.த.க-வே இளைஞர்களின் ஆப்ஷனாக இருக்கும் என்பதையும் உறுதியாக நம்புகிறது நாம் தமிழர் தரப்பு. நம்மிடம் பேசிய கொள்கை பரப்புச் செயலாளர்கள் சிலர் "விஜய்யுடன் நா.த.க கூட்டணி அமைக்காது எனத் தெரியவந்த நொடியிலிருந்தே தேர்தல் வேலைகளை வேகப்படுத்திவிட்டார் அண்ணன் சீமான்.
இதுவரை இல்லாத வகையில் பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமனமும், சோஷியல் இன்ஜினீயரிங் வியூகத்தில் வேட்பாளர் தேர்வும் நடந்தேறியிருக்கிறது. ஆனால், விஜய்க்குக் கூடும் கூட்டம் மட்டுமே கட்சி நிர்வாகிகளின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தன. அதையும் முறியடிக்கும் விதமாக பிப்ரவரி 21-ம் தேதி மாபெரும் மக்கள் மாநாட்டையும் நடத்துகிறோம். 2.5 லட்சம் நிர்வாகிகளையும், 2 லட்சம் பொதுமக்களையும் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். மாநாட்டு பணிகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது" என்றனர்.

நம்மிடம் பேசிய திருச்சி மாவட்ட நிர்வாகிகள், "திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டிபுதூர் அருகே மாநாட்டுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு திடல் 80 ஏக்கரிலும், பார்க்கிங் வசதிகள் 60 ஏக்கரிலும் முதற்கட்டமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டு திடலை 234 பிரிவுகளாக அமைத்து தொகுதிக்கு 1,000 பேரை அமர வைக்க திட்டமிட்டுள்ளனர். ரேம்ப் மாடலில் இல்லாமல் மாநாட்டு திடலுக்கு மத்தியில் சீமான் வாகனத்தில் என்ட்ரி கொடுப்பது போன்ற அமைப்பும் திட்டமிடலில் இருக்கின்றன. தொகுதிவாரியாக மக்களை அழைத்துவரும் பொறுப்பு 234 வேட்பாளர்களிடமும் மாவட்டத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் வெளிமாநிலங்களிலும் இருந்து 2 லட்சம் சேர்க்களை வாடகை எடுக்கவுள்ளோம்.
2 லட்சம் பேர் நின்றபடி பார்க்கும் அளவுக்கு திடலை விரிவுபடுத்தியுள்ளோம். மாநாட்டு திடல் முழுக்கவே தமிழ்தேசிய ஆளுமைகளின் 'Standing Banner' வைக்கவும், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 100 கி.மீ-க்கு கொடி நடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நா.த.க-வின் வழக்கமான நடைமுறைபடி, மாநாட்டு மேடையில் அதிகாரப்பூர்வமாக 234 வேட்பாளர்களையும் அறிவிக்கிறார் அண்ணன் சீமான். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை விளக்கும் வகையில் ஆட்சி வரைவை புத்தகமாக அச்சடித்து வெளியிடவுள்ளோம்" என்றனர்.












