T20 World Cup: 20 அணிகள்; இந்தியாவில் 5 மைதானங்கள்; ஜியோ ஸ்டார் ஒளிபரப்பு - உலகக...
Honeymoon murder: மேகாலயா சம்பவ பாணியில் `தேனிலவு அதிர்ச்சி' - கணவனைக் காதலன் மூலம் கொலைசெய்த மனைவி!
ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்காநகர் பகுதியில் ஒரு தம்பதி மயங்கிய நிலையில் கிடப்பதாக, போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அவர்களது பெயர் ஆசிஷ் மற்றும் அஞ்சு என்று தெரிய வந்தது.
அவர்களுக்குத் திருமணமாகி 3 மாதங்கள்தான் ஆகி இருந்தது. இது குறித்து போலீஸ் அதிகாரி அம்ரிதா கூறுகையில், ''இருவரையும் அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டுச் சென்றதாக ஒருவர் தெரிவித்தார். சம்பவ இடத்தை முழுமையாக ஆய்வு செய்தோம். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அஞ்சுவிடம் விசாரித்தபோது அவரும், அவர் கணவரும் தேனிலவுக்காக வந்திருந்தனர். இருவரும் இரவு உணவை முடித்துக்கொண்ட பிறகு நடைபயிற்சிக்காக வந்துள்ளனர். அந்நேரம் அவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. மோதிய வாகனத்தில் இருந்தவர்கள் அஞ்சுவிடம் இருந்த தங்க ஆபரணங்களையும் பறித்துச் சென்று இருந்தனர்.
முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய மனைவி
ஆனால் விசாரணையில் கள நிலவரத்திற்கும், அஞ்சு கொடுத்த வாக்குமூலத்திற்கும் இடையே முரண்பாடுகள் இருந்தது. ஆசிஷ் உடம்பில் காயங்கள் இருந்தது. கழுத்தை நெரித்ததற்கான தழும்புகளும் இருந்தது. ஆனால் அஞ்சு உடம்பில் ஒரு சிறிய காயம்கூட இல்லாமல் தப்பித்து இருக்கிறார். அஞ்சுவின் போன் உரையாடல்களை ஆய்வு செய்தபோது அஞ்சுவின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சஞ்சு என்ற வாலிபருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அஞ்சு தனது வாக்குமூலத்தை மாற்றி மாற்றிச் சொன்னதாலும், சம்பவங்கள் குறித்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாலும், எங்களுக்கு அஞ்சு மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அஞ்சுவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, காதலன் உதவியோடு ஆசிஷைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஆசிஷ் மற்றும் அஞ்சு திருமணம் நடந்துள்ளது. இத்திருமணத்தில் அஞ்சுவிற்கு விருப்பம் இல்லாமல் இருந்தது.
இதனால் அஞ்சு தனது சொந்த ஊருக்குச் சென்றார். அங்கு அஞ்சுவிற்கு அவரது சஞ்சுவின் அறிமுகம் கிடைத்தது. அஞ்சுவும், சஞ்சுவும் சேர்ந்து ஆசிஷைக் கொலைசெய்ய திட்டம் தீட்டினர். தேனிலவில் கொலைசெய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த 30ம் தேதி ஸ்ரீகங்காநகர் தேனிலவு சென்றனர். அன்று இரவு விருந்துக்குப் பிறகு அஞ்சுவும், ஆசிஷும் நடைபயிற்சிக்குச் சென்றனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் புதருக்குள் சஞ்சு தனது கூட்டாளிகள் இரண்டு பேருடன் மறைந்து இருந்தார். அவர்கள் வந்தவுடன் சஞ்சு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆசிஷைக் சரமாரியாக அடித்து உதைத்தார்.
அதோடு கழுத்தையும் நெரித்தனர். பின்னர் விபத்தில் இறந்தது போன்று செட்டிங் செய்துவிட்டு அஞ்சுவிடமிருந்த தங்க நகைகள் மற்றும் மொபைல் போனை வாங்கிக்கொண்டு சென்றுள்ளனர்.

அஞ்சு மயக்கம் அடைந்தது போன்று படுத்துக்கொண்டார்'' என்று தெரிவித்தார்.
அஞ்சு, அவரது காதலன் சஞ்சு மற்றும் கூட்டாளிகள் இரண்டு பேர் என நான்கு பேர் இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே போன்ற ஒரு கொலை மேகாலயாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்தது. மேகாலயாவிற்கு தேனிலவு சென்ற சோனம் என்ற பெண் தனது கணவர் ராஜா ரகுவன்சியை தனது காதலன் உதவியோடு கொலை செய்து உடலை பள்ளத்தில் தூக்கிப் போட்டார். 10 நாட்கள் கழித்து உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த சோனம் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.















