"எடப்பாடி பழனிசாமியின் தடுமாற்றமே அதிமுகவின் தோல்வி பயத்தை பறைசாற்றுகிறது" - செங...
ஊட்டி: கஞ்சா விற்கும் போலீஸ்; போதையில் சுழலும் ஸ்டேஷன் டூட்டி காவலர்கள்; கொந்தளிப்பில் மக்கள்
கஞ்சா விற்பனை முதல் கச்சா ஃபிலிம் தொழிற்சாலையின் வெள்ளி கலந்த மண் திருட்டு வரை நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையினரே கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வரும் நிலையில், ஊட்டி நகர மத்திய காவல் நிலைய காவலர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கையும் களவுமாகப் பிடிபட்ட நிகழ்வு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அவருடன் தொடர்பிலிருந்து கஞ்சா புழக்கத்தில் ஈடுபட்ட மேலும் மூன்று காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறார்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகள்.

பின்னணி குறித்து நம்மிடம் பகிர்ந்த காவல்துறை பெண் அதிகாரி ஒருவர், "நீலகிரியைப் பொறுத்தவரை குற்றச்செயல்களில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தவறிழைக்கும் பல காவலர்களை பனிஷ்மெண்ட் டிரான்ஸ்ஃபர் என்ற பெயரில் நீலகிரிக்கு மாற்றுகிறார்கள். பனிஷ்மெண்ட்டில் வரும் காவலர்கள் இங்கு வந்ததும் குற்றச்செயல்களை இன்னும் சௌகரியமாகத் தொடர்கிறார்கள்.
குறிப்பாக கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்பனையில் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள். பலர் கைதும் ஆகியிருக்கிறார்கள். இந்த நிலையில்தான், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியிடம் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி நீலகிரியில் விற்பனை செய்து வந்த ஊட்டி போலீஸ் நசீர் அகமது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தக் கஞ்சா வியாபாரியிடம் இருந்து 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பணி நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களைப் பயன்படுத்தியதாக எருமாடு காவல் நிலையத்தைச் சேர்ந்த அபிசேகரன், கோத்தகிரி போலீஸ் மாயக்கண்ணன், மசினகுடி போலீஸ் சாந்தகுமார் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா புழக்கத்தில் நீலகிரியில் பணியாற்றும் டிராஃபிக் மற்றும் சட்ட ஒழுங்கு காவலர்கள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.



















