`இந்த தொழில் மேல இருக்குற பாசத்துலதான் விடாம செஞ்சுட்டு இருக்கேன்'- ஒரு பானைக் க...
Annamalai: `கர்நாடக சிங்கம் - விவசாயி - பாஜக - தனிக்கட்சி.!' - அண்ணாமலை கடந்து வந்த பாதை! | Timeline
ஐ.பி.எஸ் வேலையை விட்டு விவசாயத்தில் கவனம் செலுத்திய சாதாரண விவசாயி தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமானவர் அண்ணாமலை. அதைத் தொடர்ந்து அவரின் அரசியல் தொடர்பான கருத்துகள் மூலம் தனக்கென செல்வாக்கை வளர்த்துக்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக தமிழக பாஜக தலைவர் என்ற இடத்துக்கும் நகர்ந்தார். அவரின் அரசியல் பயணத்தில் தொடர்ந்து பல சர்ச்சைகள், சலசலப்புகள் என வலம் வந்த நிலையில், நயினார் நாகேந்திரன் பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதற்குப்பிறகு மெல்ல மெல்ல லைம் லைட்டிருலிருந்து வெளியேறிய அண்ணாமலை, கடந்த சில வாரங்களாக பா.ஜ.க அரசுக்கு எதிரான சிலக் கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.

அப்போதே அண்ணாமலை தனிக்கட்சித் தொடங்கப்போவதாக தகவல்கள் கசிந்தன. அதை ஏற்கவோ, மறுக்கவோ செய்யாத அண்ணாமலை, அவரின் பிறந்தநாளான நேற்று பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களை டெல்லிச் சென்று சந்தித்தார். அதைத் தொடர்ந்து பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் பா.ஜ.க தலைமைக்கு கடிதம் கொடுத்திருந்தார். அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பா.ஜ.க தலைமை தெரிவித்திருந்தது.
இதனிடையே இன்று சமூக வலைதள நேரலையில் வந்த அண்ணாமலை, தான் ஏற்கனவே தொடங்கிய we the leaders அமைப்பு மூலம் புதிய பயணத்தை தொடங்க இருப்பதாகவும், பின்னர் அது தனிக் கட்சியாக மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, அண்ணாமலை கடந்து வந்தப் பாதையை சுருக்கமாக பார்க்கலாம்.
கரூர் மாவட்டம் தொண்டம்பட்டி கிராமத்தில் குப்புசாமி - பரமேஸ்வரி தம்பதியருக்கு ஜூன் 4, 1984-ல் மகனாகப் பிறந்தார்.
கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சாமானிய விவசாய குடும்ப பின்னணியை சேர்ந்த இவர், கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற பிஎஸ்ஜி (PSG) தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை 2007-ல் முடித்தார்.
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான IIM Lucknow கல்லூரியில் 2010-ம் ஆண்டு MBA முடித்து பட்டம்பெற்றார்.
இந்தியாவின் மிகக் கடினமான UPSC தேர்வில், தனது முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று, கர்நாடகா கேடரில் ஏஎஸ்பி அதிகாரியாக 2011-ல் பணியில் இணைந்தார்.
அகிலா சுவாமிநாதன் என்பவருடன் 2013-ல் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.

போதைப்பொருள் ஒழிப்பு, சட்டவிரோத கும்பல் ஒடுக்குமுறை போன்ற அதிரடி நடவடிக்கைகளால் கர்நாடக மக்கள் மத்தியில் "சிங்கம்" என்று பாராட்டப்பட்ட அண்ணாமலை உடுப்பி மாவட்ட எஸ்.பி-யாக 2015-ல் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
கர்நாடகாவின் முக்கியப் பகுதியான பெங்களூர் தெற்கு பிரிவின் துணை ஆணையராகப் (DCP) 2018-ல் பொறுப்பேற்றார்.
மக்களுக்கு நேரடியாகச் சேவை செய்யவும், இயற்கை விவசாயத்திற்குத் திரும்பவும் தனது ஐபிஎஸ் பதவியை விருப்ப ஓய்வு (VRS) மூலம் மே 2019-ல் ராஜினாமா செய்தார்.
கரூர் சொந்த கிராமத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, கிராமப்புற இளைஞர்களின் தலைமைத்துவத்தை வளர்க்க We The Leaders என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை 2019 - 2020 காலகட்டத்தில் தொடங்கினார்.
டெல்லியில் முரளிதர் ராவ் மற்றும் எல். முருகன் முன்னிலையில் ஆகஸ்ட் 25, 2020-ல் முறைப்படி பா.ஜ.க-வில் இணைந்தார். அடுத்த சில வாரங்களிலேயே மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
2021-ல் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு 38.71% வாக்குகள் பெற்றார். எனினும், தி.மு.க வேட்பாளரிடம் சுமார் 89,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தமிழ்நாடு பா.ஜ.க-வின் மிக இளம் வயது மாநிலத் தலைவராக ஜூலை 16, 2021-ல் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.
அண்ணாமலை கட்டியிருந்த ரபேல் வாட்ச் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஏப்ரல் 2023-ல் அதற்கான பில்களை வெளியிட்டார். ஆனாலும், இப்போதுவரை ரபேல் வாட்ச் விவகாரம் சர்ச்சையானதாகவே இருக்கிறது.

தி.மு.க பிரமுகர்களின் சொத்துப்பட்டியல் மற்றும் ஆடியோக்களை "DMK Files" என்ற பெயரில் 2023 வெளியிட்டார். இதன் காரணமாக பல்வேறு அவதூறு வழக்குகளைச் சந்தித்தார்.
2023 - பிப்ரவரி 2024 வரை அமித் ஷா தொடங்கி வைத்த 'என் மண் என் மக்கள் நடைப்பயணம்' மூலம் தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளை நடந்து கடந்தார். பிப்ரவரி 2024-ல் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்துடன் இது நிறைவடைந்தது.
அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா பற்றிய அண்ணாமலையின் விமர்சனங்களால் 2023-ல் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அதிகாரப்பூர்வமாக முறிந்தது.
2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, 32.79% வாக்குகள் பெற்றார். எனினும், தி.மு.க வேட்பாளரிடம் 1,10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை எதிர்த்து, 'தி.மு.க ஆட்சியை வீழ்த்தும் வரை காலணி அணிய மாட்டேன்' என டிசம்பர் 2024-ல் சபதமேற்று 48 நாட்கள் வெறும் காலோடு சவுக்கடி போராட்டம் நடத்தினார்.
அண்ணாமலையின் செயல்பாடுகளால் பாரம்பரிய தலைவர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினர் ஓரங்கட்டப்படுவதாகக் கூறி பா.ஜ.க-விற்குள் அதிருப்தி நிலவியது. குற்றப் பின்னணி உடையவர்களைக் கட்சியில் இணைத்தார் என்ற விமர்சனமும் அண்ணாமலை மீது எழுந்தது
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஃபெல்லோஷிப் படிக்க அமெரிக்கா சென்ற அண்ணாமலை, பின்னர் தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்காலம் முடிய, தலைவர் பதவி நீட்டிக்கப்படவில்லை.
இதனைடையே தன்னிச்சையான செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த தேசிய தலைமை, 2025-ல் நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக நியமித்தது. இதனால் அவர் சட்டமன்றத் தேர்தல் பணிக் குழுவில் இருந்தும் விலக்கப்பட்டார். தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் அவர் மறுத்துவிட்டார்.

இதே காலகட்டத்தில், கோவையில் 14 ஏக்கர் நிலம் வாங்கி ஆர்கானிக் மற்றும் டைரி பார்மிங் தொடங்கினார். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த 'ஸ்டான்போர்ட் இந்தியா கான்பரன்ஸ்' நிகழ்வில் ஸ்பீக்கராகப் பங்கேற்றார். 'அரபி' என்ற கன்னடப் படத்திலும் நடித்தார்.
புதிய தலைவர் நயினார் நாகேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, அண்ணாமலை மீண்டும் காலணி அணியத் தொடங்கினார்.
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையால் வழங்கப்பட்ட 6 தொகுதிகளின் பொறுப்பில் இருந்து விலகினார். மேலும், இந்தத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், ஆனால் NDA கூட்டணிக்காகத் தீவிரப் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அறிவித்தார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு த.வெ.க மீது விமர்சனங்களை முன்வைத்த அண்ணாமலை தற்போது பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பை விட்டும் விலகியிருக்கிறார்.
இன்று (05-06-2026)ஏற்கனவே இருக்கும் தனது அமைப்பு மூலம் புதிய அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.













