3 லட்சத்தை நெருங்கும் அண்ணாமலையின் 'We The Leaders' : இந்த அமைப்பின் ரூட் என்ன? ...
பெரம்பூர்: சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம் - ரயில் நிலையத்தில் பயணிகள் அதிர்ச்சி
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் வழக்கம் போல பரபரப்பாக இருந்தது. ரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் உள்ள படிக்கட்டில் நீல நிற சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக இருந்தது. அதிலிருந்து துர்நாற்றமும் வீசியது. இதுகுறித்து பயணிகள், ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸார், சூட்கேஸை திறந்து பார்த்தனர். அப்போது சூட்கேஸிக்குள் ஆண் சடலம் ஒன்று துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத வகையில் இருந்தது. அதனால் ரயில்வே போலீஸாரும் பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சடலத்தை மீட்ட ரயில்வே போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், ``இன்று (5/6/2026) காலை சுமார் 7.15 மணியளவில் பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. சிறப்பு உதவி ஆய்வாளர் மார்க்கபந்து தலைமையிலான போலீஸார், அந்த சூட்கேஸை மீட்டனர். சூட்கேஸிக்குள் ஆண் சடலம் மிகவும் கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்தது. தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன. மேலும், சூட்கேஸில் இருந்து ரத்தம் கசிந்த தடயங்கள் எதுவும் இல்லை. அதனால் வேறு இடத்தில் கொலை செய்து இங்கு வந்து சூட்கேஸை போட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம். அதனால், சூட்கேஸை இங்கு போட்டது யார் என்று சி.சி.டி.வி மூலம் ஆய்வு செய்து வருகிறோம். காணாமல் போனவர்களின் விவரங்களையும் சேகரித்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.


















