`திமுக நாசமாக போனதற்கு, திமுக-வினர் தான் காரணம்' - முன்னாள் அமைச்சர் மூர்த்தி
"இயற்கை உரம் போட்டு வளர்த்தேன்"- வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்து சட்னி செய்து சாப்பிட்ட ஐடி மேலாளர்
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் (26) என்பவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் 'டெக்னோபார்க்' வளாகத்தில் உள்ள ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார்.
ஐடி கம்பெனி மேலாளராகப் பதவி வகிக்கும் அவர் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வந்துள்ளார். திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 17-வது மாடியில் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே காங்கிரஸ் அரசு வந்தபிறகு கேரள காவல் துறையினர் போதைப்பொருளுக்கு எதிராக 'ஆப்பரேஷன் தூபான்' என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
ஆப்பரேஷன் தூபான் டீம் ஐடி மேலாளர் விஷாலின் பிளாட்டில் அதிரடி சோதனை நடத்தியது. விஷாலின் படுக்கையறை ஜன்னல் ஓரத்தில் ஒரு மினி கஞ்சா தோட்டத்தையே அவர் அமைத்திருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். முட்டை வைக்கும் அட்டைப்பெட்டிகள் மற்றும் செடிகள் வளர்க்கும் சிறிய தொட்டிகள் எனச் சுமார் 70 கஞ்சா செடிகள் அங்கு வளர்ந்து நின்றன.
மேலும், 19 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றி விஷாலிடம் விசாரணை நடத்தியதில், அவர் இதை விற்பனை செய்வதற்காக வளர்க்கவில்லை எனவும், தனது சொந்த தேவைக்காகவே வளர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கஞ்சா இலைகளை அரைத்து சட்னி செய்து சாப்பிடுவதாகவும், சில நேரங்களில் கஞ்சா இலைகளை அரைத்துப் பாலில் கலந்து குடிப்பதுமே எனது வழக்கம் என்றும் விஷால் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பகலில் ஐடி மேலாளராக வலம் வந்தவர், இரவில் தன் பிளாட்டிற்கு வந்து கஞ்சா செடிகளை வளர்த்து பல விதங்களில் சாப்பிட்டு போதையில் மிதந்துள்ளார். இதைத்தொடர்ந்து விஷாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "விஷால் குடியிருந்த பிளாட்டின் 17-வது மாடியில் சூரிய வெளிச்சம் நன்கு படும் ஜன்னல் ஓரங்களைத் தேர்ந்தெடுத்து கஞ்சா செடிகளை வளர்த்துள்ளார். கஞ்சா செடிகளின் வாசம் வெளியே தெரியாமல் இருக்க ரூம் ஸ்பிரே உள்ளிட்ட நறுமண பொருட்களையும் அவர் தொடர்ந்து பயன்படுத்தி உள்ளார்.
கஞ்சா செடிகளுக்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களையே பயன்படுத்தியிருக்கிறார். ஆன்லைன் மூலமாகச் செடிகளுக்கான உரம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களைத் தொடர்ந்து ஆர்டர் செய்து வந்துள்ளார்.
அவர் ஆன்லைன் மூலம் உரங்கள் வாங்குவது குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் நடத்திய விசாரணையின் காரணமாக கஞ்சா வளர்த்த இளைஞர் சிக்கியுள்ளார்.

கைது செய்யப்பட்ட விஷால் கஞ்சாவைப் புகைப்பதில்லை எனத் தெரிவித்துள்ளார். கஞ்சாவைப் புகைத்தால் அதன் வாசனை மூலம் பக்கத்து பிளாட்டுகளில் வசிப்பவர்களுக்கு எளிதில் சந்தேகம் வந்துவிடும் என்பதால், கஞ்சாவை சட்னியாக அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கல்லூரியில் பயிலும்போதே இந்தப் பழக்கம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஐடி துறையில் உள்ள வேலைப் பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே இதைச் செய்ததாக அவர் கூறியுள்ளார். அதே சமயம், இவ்வளவு பெரிய அளவில் செடிகளை வளர்ப்பது சட்டப்படி கடுமையான குற்றமாகும். இதன் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகிறோம்" என்றனர்.


















