`திமுக நாசமாக போனதற்கு, திமுக-வினர் தான் காரணம்' - முன்னாள் அமைச்சர் மூர்த்தி
மும்பை: வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி; 948 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு... பத்திரமாக மீட்ட போலீஸ்!
மும்பை திவா பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போனார். இது குறித்து அவர் பெற்றோர் போலீஸில் புகார் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். சிறுமியைக் கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 68 கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பிறகு திவா ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் அச்சிறுமி தென்பட்டாள். அச்சிறுமி ஒரு நபருடன் ரயிலில் ஏறி புறப்பட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அனைத்து ரயில் நிலையங்களுக்கும் போலீஸார் சென்று கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் அம்பர்நாத் ரயில் நிலையத்தில் அந்த அடையாளம் தெரியாத நபர் அச்சிறுமியுடன் ரயிலில் இருந்து இறங்கினார்.
அவர் அங்கிருந்து பத்லாப்பூர் செல்லும் ரயிலில் ஏறினார். இதையடுத்து பத்லாப்பூர் ரயில் நிலையம் மற்றும் அதனைகிச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸார் அச்சிறுமியை அழைத்துச் சென்ற நபர் குறித்து விசாரித்தனர்.

அதோடு அப்பகுதியில் இருக்கும் அனைத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன. நீண்ட தேடுதலுக்குப் பிறகு அச்சிறுமி சுமித் சாந்தாராம் என்பவரது வீட்டில் பாதுகாப்பாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வீட்டில் சுமித் சாந்தாராமிற்கு ஏற்கெனவே 3 மைனர் குழந்தைகள் இருந்தனர். அவர்களுடன் காணாமல் போன சிறுமி பத்திரமாக இருந்தாள். சாந்தாராம் மனைவி அவருடன் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று இருந்தார். இதனால் சாந்தாராம் தனது 3 குழந்தைகளையும் வளர்த்து வந்தார். மீட்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்தபோது அவரது வீட்டில் பெற்றோர் மிகவும் மோசமாக நடத்தியதாகவும், அதிகமான வீட்டு வேலைகளை கொடுத்து செய்யச் சொன்னதாகவும், எனவேதான் வீட்டை விட்டு வெளியேறி வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு அதிக மக்கள் தொகை கொண்ட நகரத்தில் காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலானது என்றும், ஆனால் நாங்கள் போராடி 948 கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு கண்டுபிடித்துவிட்டோம் என்று போலீஸ் அதிகாரி பாலாசாஹேப் தெரிவித்தார்.



















