அழைப்பு விடுத்த ஸ்டாலின்... திமுகவில் இணையும் விசிக பனையூர் பாபு?
கல்லூரியில் பூட்டியிருந்த அறையில் கிடந்த 2 சூட்கேஸ்களில் கரையான் அரித்த 1 கோடி ரூபாய் நோட்டுக்கள்!
கொல்கத்தாவின் மத்திய பகுதியில் செயல்படும் சுரேந்திரநாத் கல்லூரியில் பூட்டப்பட்டு இருந்த ஒரு அறையை திறந்து ஊழியர்கள் சுத்தப்படுத்தியபோது, உள்ளே இரண்டு சூட்கேஸ்கள் இருந்தது. அந்த சூட்கேஸ்களை திறந்து பார்த்தபோது ஊழியர்கள் அதிர்ச்சியடைதுவிட்டனர்.
உள்ளே 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் பண்டல், பண்டலாக இருந்தது. ஆனால் அனைத்தும் கரையான் அரித்த நிலையில் மிகவும் மோசமாக சேதம் அடைந்த நிலையில் பயன்படுத்த முடியாதபடி இருந்தது. அது மொத்தம் ஒரு கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு பெரிய தொகையை யார் கல்லூரி வளாகத்திற்குள் கொண்டு வந்து பதுக்கி வைத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பணம் இருந்த அறையை கல்லூரி தொழிற்சங்க அலுவலகமாக நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தனர். அதன் பிறகு பல ஆண்டுகளாக அந்த அறை மூடப்பட்டு இருந்தது. விரைவில் பருவமழை தொடங்கும் என்பதால் மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால், ஊழியர்கள் கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்தினர்.

அப்போது நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு இருந்த அறையை திறந்து சுத்தம் செய்தபோது உள்ளே இருந்த அலமாரியில் இரண்டு பழைய சூட்கேஸ்கள் இருந்தது.
இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். அதோடு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் முன்னிலையில் சூட்கேஸ்கள் திறக்கப்பட்டது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கல்லூரி அதிகாரிகளின் முன்னிலையில் சூட்கேஸ்கள் திறக்கப்பட்டபோது, அவற்றுக்குள் கரையன்களால் சேதமடைந்த பணக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
அந்தப் பணத்தாள்கள் பழமையானவையாகவும், மிகவும் மோசமாகச் சிதைந்த நிலையிலும் காணப்பட்டன. மீட்கப்பட்ட பணத்தின் துல்லியமான அளவு எவ்வளவு என்பதையும், அந்தப் பெட்டிகள் எவ்வளவு காலமாக அங்கு கிடந்தன என்பதையும் கண்டறிய நாங்கள் முயன்று வருகிறோம். மேலும், அந்த அறைக்குள் நுழைய யாருக்கெல்லாம் அனுமதி இருந்தது என்பதையும், அந்தப் பணம் எவ்வாறு அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தது என்பதையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்," என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
அந்த பணத்தை யார்வைத்தது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இவ்வளவு அதிகமான தொகை எப்படி யாருக்கும் தெரியாமல் கல்லூரி வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது என்று கேள்வி எழுப்பிய பா.ஜ.க எம்.எல்.ஏ.சஜல் கோஷ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியின் தொழிற்சங்கத்திற்கு இதில் தொடர்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.



















