3 லட்சத்தை நெருங்கும் அண்ணாமலையின் 'We The Leaders' : இந்த அமைப்பின் ரூட் என்ன? ...
3 லட்சத்தை நெருங்கும் அண்ணாமலையின் 'We The Leaders' : இந்த அமைப்பின் ரூட் என்ன? எதற்கு இது?
'தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ராஜினாமா' - இந்த 'ஹாட் செய்தி' தமிழ்நாடு, டெல்லி மட்டுமல்ல... இந்தியா முழுவதையுமே கவனிக்க வைத்துள்ளது.
2011-ம் ஐ.பி.எஸ்ஸாக இந்திய சிவில் சர்வீஸில் காலடி எடுத்து வைத்தவர், 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜவில் இணைந்தார்.
அப்போதிருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில், தமிழ்நாடு பாஜகவின் எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும், கடைசி வரியிலாவது அண்ணாமலையின் பெயர் இடம்பெற்றுவிடும். அந்தளவு தமிழ்நாடு பாஜகவில் நீக்கமற நிறைந்திருந்தார்.
அதிமுக உடனான சலசலப்பு தான் அவருடைய மாநிலத் தலைவர் பதவிக்கு எண்ட் கார்டு எழுதி, இப்போதைய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பிள்ளையார் சுழி போட்டது.
இந்தப் பிள்ளையார் சுழிக்குப் பிறகு, அண்ணாமலை லைம்லைட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் அவராகவே விலகிக்கொண்டார்.
இந்த நிலையில், தற்போது, 'புதிய இயக்கம்; புதிய பாதை' என்று புதிய ரூட்டைப் பிடித்திருக்கிறார் அண்ணாமலை.
வருகிற தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் தான் இலக்கு என்றும் அறிவித்திருக்கிறார் அண்ணாமலை. அதை சார்ந்தே அவரது அரசியல் கட்சி முதல் கட்டமாக இயங்கப் போகிறது.
அந்த அரசியல் கட்சிக்கு அடித்தளமாக, தன்னுடைய 'We The Leaders - Lead The Change' என்கிற அமைப்பில் மக்களை இணையுமாறு இன்று நண்பகல் 12.44-க்கு அழைப்பை விடுத்தார் அண்ணாமலை.
அப்போது அந்த இயக்கத்தில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 14,000. ஆனால், அப்போதிருந்து இப்போது இந்த எழுதிக்கொண்டிருக்கிற இந்த வேளையில், அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2.84 லட்சமாக உயர்ந்துள்ளது.
We The Leaders இயக்கம் இப்போது தொடங்கியது அல்ல. 2020-ம் ஆண்டே, இந்த இயக்கத்தை தொடங்கிவிட்டார் அண்ணாமலை. இந்த இயக்கத்தின் தலைமையகம் கோவையில் அமைந்துள்ளது.

வலைதளத்தின் தரவுகளின் படி...
இந்த இயக்கத்தின் நோக்கம் - தலைமைத்துவம், கல்வி மற்றும் சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களின் மூலமாக, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது.
ஃபோக்கஸ் ஏரியா - கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், சமூதாய வளர்ச்சி.
இந்த இயக்கத்தால் இதுவரை 50,000 மேற்பட்டோர் பயனடைந்திருக்கின்றனர். 2,000-க்கும் மேற்பட்டோர் திறன் மேம்பட்டிருக்கின்றனர். 50-க்கும் மேற்பட்டோர் இந்த மேம்பாட்டிற்காக உழைத்திருக்கின்றனர்.
எப்படி சமூதாயம் வளர்ச்சிக்கு வேலை செய்வார்கள்? - கல்வித் திட்டங்கள், தலைமைக்கான பயிற்சி, சமூதாய சேவை திட்டங்கள்.
மற்ற அமைப்புகளை விட, இந்த அமைப்பு எப்படி மாறுபட்டது? - அடிமட்ட அளவிலான தலைமைத்துவ மேம்பாடு (Grassroots leadership development), நிலையான சமூகத் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது.
மற்றப்படி, அந்த வலைதளத்தில் Our partners, Issues போன்ற சில டேப்களில் 'We are Working on it' என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த வலைதளத்தின் இந்தப் பார்வையும், லுக்கும் அநேகமாக இன்று தான் கடைசியாக இருக்கும். ஏனெனில் அடுத்து இந்த இயக்கத்தின் மூலம் தான் அண்ணாமலை தனது அரசியல் பாதையைக் கொண்டு செல்ல நினைக்கிறார்.

அண்ணாமலை இன்று பேசுகையில், "ஆனந்தமாக அன்போடு அரசியல் இயக்கத்தை நாம் தொடங்க இருக்கிறோம். அடுத்து நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் நம்முடைய கட்சி போட்டியிடும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் அதற்கு நாம் தயாராக வேண்டும். நிறைய தலைவர்களைத் தயார்படுத்த வேண்டும். அதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். எல்லோருக்கும் அரசியலைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
தமிழகத்தை முதன்மை மாநிலமாகக் கொண்டு வர வேண்டும். நம்முடைய இயக்கம் அரசியல் கட்சியாக மாறும்போது மக்கள் அந்தத் தரத்தைப் பிரித்து பார்ப்பார்கள்.
தமிழகத்திற்கு மாற்றம் தரவேண்டும் என்று நினைக்கிறேன். முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டு வந்து பிறகு அரசியல் கற்றுக்கொடுத்து கட்சியாக மாற்றுவேன்" என்று கூறியிருக்கிறார்.
அண்ணாமலை கூறும் அரசியல் தயார்படுத்துதல் இந்த அமைப்பில் தான் நடத்த உள்ளார். அதனால், விரைவில் இந்த இயக்கத்தில் பல பல நிகழ்வுகளைப் பார்க்கலாம்... ஏன் இந்த இயக்கத்தை இனி அடிக்கடி தலைப்பு செய்திகளில் கூட பார்ப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பொறுத்திருந்து பார்ப்போம்!













