சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல...
AVM: ``என் கஷ்ட காலங்களில்" - ஏவிஎம் சரவணன் குறித்து கலங்கிய ரஜினி
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம். தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய இந்த நிறுவனம் ஏராளமான படங்களைத் தயாரித்திருக்கிறது.
ஏ.வி. மெய்யப்ப செட்டியாருக்கு பின் அந்த நிறுவனத்தை ஏ.வி.எம் சரவணன் நிர்வகித்து வந்தார். இவரின் காலத்தில் ஏ.வி.எம் நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டியது.
2014-ம் ஆண்டிற்கு பின் ஏ.வி.எம் நிறுவனம் தங்களின் சினிமா தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொண்டது. இதற்கிடையில், ஏ.வி.எம் சரவணன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏ.வி.எம் சரவணன் இன்று அதிகாலை காலமானார். அவரின் உடல் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள 3வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு திரைப் பிரபலங்கள் தொடர்ந்து ஏ.வி.எம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “மிகப்பெரிய மனிதர். ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துகாட்டு சரவணன் சார். எப்போதும் வெள்ளை உடைதான் அணிவார். அவருடைய உள்ளமும் அப்படித்தான் இருக்கும். சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தார். 10 நிமிடம் பேசினால்கூட அதில் 10 முறை 'அப்புச்சி... அப்புச்சி...' என தன் அப்பாவை நினைவுப்படுத்துவார். என் மீது அதிக அன்பு வைத்தவர். என் நலன் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்குத் துணையாக நின்றவர்.

ஏ.வி.எம் தயாரிப்பில் 9 படங்கள் நடித்திருக்கிறேன். அதில் எல்லா படங்களும் மாபெரும் வெற்றிப் படங்கள். அதற்கு முக்கியக் காரணம் சரவணன் சார். 80-களில் தமிழில் மிக பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்ட படம் முரட்டுக்காளை. 2000-களில் சிவாஜி.
2020-களில் ஒரு படம் எடுக்கலாம் எனப் பேசிக்கொண்டிருந்தோம். அது நடக்கவே இல்லை. அவருடைய மறைவு மிகவும் மனதை பாதிக்கிறது. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். அவரின் குடும்பத்தாருக்கு என் இரங்கல்கள்.













