"முதிர்ச்சியற்ற செயல்" முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்த கேரள...
Doctor Vikatan: காய்ச்சல் இருக்கும் நாள்களில் குளிக்கலாமா... அது காய்ச்சலைக் குறைக்குமா?
Doctor Vikatan: காய்ச்சல் இருக்கும்போது குளிக்கக்கூடாது என்கிறார்கள் சிலர். அப்படியில்லை, குளித்தால் காய்ச்சல் குறையும் என்கிறார்கள் இன்னும் சிலர். உண்மையில் காய்ச்சல் இருக்கும்போது குளிப்பது சரியா, தவறா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்
பொதுவாக, தீவிரமான காய்ச்சல் இருக்கும் போது குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. உதாரணமாக, மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு காய்ச்சல் நீடிக்கிறது என்றால், அந்த நாள்கள் முழுவதும் குளிப்பதைத் தவிர்ப்பதுதான் நல்லது.
காய்ச்சல் இல்லாத ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளவர்களுக்கே குளிர்ந்த நீரில் குளிக்கும் போது உடலில் லேசான நடுக்கம் ஏற்படும். அதுவே காய்ச்சல் இருக்கும்போது குளித்தால், அந்த நடுக்கம் இன்னும் அதிகமாகும். இதனால் உடலின் உட்புற மைய வெப்பநிலை (Core temperature) மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நடுக்கம் காரணமாக காய்ச்சலின் தீவிரம் இன்னும் அதிகமாகலாம். தவிர, காய்ச்சல் நேரத்தில் குளிப்பது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை (Dehydration) ஏற்படுத்தக்கூடும். காய்ச்சல் லேசாக இருக்கும்போதோ அல்லது தீவிர காய்ச்சல் குறைந்து உடல் குணமாகி வரும் நாள்களிலோ நீங்கள் குளிக்கலாம்.

காய்ச்சல் குறைந்து வரும் நாள்களில் உடல் சோர்வாகவோ அல்லது அதிக வியர்வையுடனோ இருந்தால், லேசான வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட மிகக் குறைந்த நேரத்தில், அதாவது விரைவாகக் குளித்து முடிக்க வேண்டும். குளித்து முடித்த உடனே உடலை நன்றாகத் துடைத்துவிட வேண்டும்.
காய்ச்சலின் தீவிரம் மற்றும் அது எத்தனை நாள்களாக இருக்கிறது என்பதைப் பொறுத்தும், காய்ச்சலிலிருந்து உடல் எந்த அளவு மீண்டு வருகிறது என்பதைப் பொறுத்தும் குளிப்பதைத் தீர்மானிக்க வேண்டும். உடல் சோர்வைப் போக்குவதற்காகவோ அல்லது சில நாள்கள் குளிக்காமல் இருப்பதாலோ குளிக்க நினைப்பவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம். ஆனால், தீவிர காய்ச்சல் இருக்கும் போது குளிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.
குளியலைத் தவிர்க்கும் நாள்களில் டெபிட் ஸ்பாஞ்சிங் (Tepid Sponging) முறையைப் பின்பற்றலாம். குழந்தைகளுக்குக் காய்ச்சல் வரும்போது பொதுவாகப் பின்பற்றப்படும் சிறந்த முறை டெபிட் ஸ்பாஞ்சிங். இதில் ஈரத்துணியைக் கொண்டு குழந்தையின் உடல் முழுவதும் ஒற்றி எடுக்கப்படும். முழுமையான குளியலுக்கு பதிலாக, இந்த முறையில் உடலை ஈரத்துணியால் துடைத்து எடுப்பது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது.

காய்ச்சல் இருக்கும் போது குளித்தால் உடனே காய்ச்சல் குணமாகிவிடும் என்பது போன்ற தவறான வீடியோக்கள் மற்றும் தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அவற்றைப் பார்த்துவிட்டுப் பெற்றோர்கள் பலரும் காய்ச்சல் இருக்கும்போது குழந்தைகளைக் குளிப்பாட்டுகிறார்கள். இது முற்றிலும் தவறான செயல். எனவே, காய்ச்சல் இருக்கும் நேரத்தில் குளிக்காமல், உடலுக்குப் போதிய ஓய்வு (Rest) கொடுத்துப் பராமரிப்பதுதான் உடல ஆரோக்கியத்திற்கு நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















