`தமிழகத்தை ஆட்சி செய்யும் தகுதியை தவெக இழந்துவிட்டது!’ - தவெகவை சாடும் அதிமுக
Karuppu: "இளையராஜாவைக் காயப்படுத்தும் எண்ணம் சிறிதளவும் இல்லை" - படக்குழு வருத்தம்; பின்னணி என்ன?
சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' படத்திற்குத் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
சாய் அபயங்கர் இசையில் வந்திருக்கும் இப்படத்தின் பாடல்களும் திரையரங்குகளைக் கொண்டாட்டமிக்கதாக மாற்றியிருக்கின்றன.

இப்படத்தின் ஒரு காட்சியில் 'அலை ஓசை' படத்தில் வரும் 'போராடடா' பாடலைப் பயன்படுத்தியிருப்பார்கள். அதன் பிறகு அக்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பற்றிய ஒரு வசனமும் இடம்பெற்றிருக்கும்.
அந்த வசனத்தை வைத்ததற்காக படக்குழுவினரை, ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளப் பக்கங்களில் விமர்சித்தனர். இந்நிலையில் அதற்கு வருத்தம் தெரிவித்துப் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாகப் பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "'கருப்பு' திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா ஐயாவின் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியைக் கடத்தும் நோக்கத்திற்காகக் கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு.
50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்குச் சிறிதளவும் இல்லை.

உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசைஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


















