கருப்பு: ``அந்த நேரத்தில் வீடியோ எடுக்காதீர்கள்" - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வ...
கருப்பு: ``அந்த நேரத்தில் வீடியோ எடுக்காதீர்கள்" - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த வாரம் வெளியான இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் போது, திரையரங்குகளில் சில ரசிகர்கள் சாமியாடும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சினிமா என்பதையும் தாண்டி, மக்கள் இதை ஒரு ஆன்மீக எமோஷனல் அனுபவமாக கொண்டாடி வருகிறார்கள்.

இது தொடர்பாக இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``படத்திற்கு மக்கள் அளித்து வரும் பேராதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றி. மேலும், திரையரங்குகளில் ரசிகர்களுக்கு அருள் ஏற்பட்டால், அருகில் இருப்பவர்கள் அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அன்பான வேண்டுகோள் வைக்கிறேன். மேலும், திரையரங்கு ஊழியர்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து, அவர்களைக் கண்ணியமான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக நடிகர் சூர்யாவும் தன் எக்ஸ் பக்கத்தில், ``கருப்பு திரைப்படத்திற்கு ஏற்பட்ட தடைகளைத் தாண்டி முழு ஆதரவு தந்து, வெற்றிகரமாகத் திரையிட்டுவரும் என் அன்பிற்குரிய திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியீட்டிற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விநியாகஸ்தர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! மேலும், திரையரங்குகளில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைபவர்களுக்கு, உரிய முதலுதவி வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தில் மற்றவர்கள் அதை வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுருத்த அன்போடு வேண்டுகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.















