Magudam Review: இரட்டை வேட ஆக்ஷன் ட்ராமா... இயக்குநராக விஷால் சாதிக்கிறாரா, சோதி...
Magudam Review: இரட்டை வேட ஆக்ஷன் ட்ராமா... இயக்குநராக விஷால் சாதிக்கிறாரா, சோதிக்கிறாரா?
மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துக்கொண்டு, மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எளிய நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்).
இன்னொரு புறம், கப்பல்களையே விலைக்கு வாங்கும் அளவுக்கு பணமும் அதிகாரமும் கொண்ட ‘கிங் பின்’ லிங்கா (விஷால்). விசாகப்பட்டினம் துறைமுகத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
இரு துருவங்களாக இருக்கும் கிருபாகரன் - லிங்கா இருவருக்குமான தொடர்பு என்ன, அவர்களின் வாழ்க்கை ஒன்றோடொன்று சந்திக்கும்போது என்ன நடக்கிறது என்பதுதான் விஷால் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ‘மகுடம்’ திரைப்படம்.

கிருபாகரனின் குடும்ப வாழ்க்கையையும், அதில் அவர் சந்திக்கும் சிக்கல்களையும் காட்சிப்படுத்துகின்றன படத்தின் தொடக்கக் காட்சிகள். மறுபுறம் லிங்கா குறித்த சிறிய அறிமுகமும் கொடுக்கப்படுகிறது. காமெடி, கார் வாங்குவதற்கான போராட்டம் என ஃபேமிலி ட்ராமா மோடில் நகரும் படம், திடீரென லிங்காவின் கதையோடு கிருபாகரனின் குடும்பத்தை இணைத்து இன்டர்வெல்லை எட்டுகிறது.
அதன்பின் லிங்காவின் மிகவும் 'நீண்ட' ஃப்ளாஷ்பேக், இருவருக்குமான பந்தம் என்ன என நகர்கிறது திரைக்கதை. டெம்ப்ளேட் கதை என்றாலும், டபுள் ஆக்ஷனில் ஒரு ஆக்ஷன் விருந்து வைக்கலாம் என இயக்குநராகவும் களமிறங்கியிருக்கிறார் விஷால்.
இரட்டை வேடங்கள், மூன்று வெவ்வேறு லுக்குகளில் விஷால். அதில் வயது முதிர்ந்த லிங்காவாக அவரது நடிப்பு எடுபடாதது படத்தின் முக்கிய பலவீனம். அந்தப் பாத்திரத்தில் ஒப்பனை, உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலுமே செயற்கைத்தனம்.
'முத்துமணி மாலை...' என இளையராஜா பாடலைப் பின்னணியில் போட்டு விட்டு அவர் சண்டை செய்யும் காட்சியெல்லாம்... ப்ச்ச்! ஒப்பீட்டளவில் கிருபாகரன் பாத்திரம் விஷாலின் வழக்கமான இயல்புடன் ஒத்துப்போகிறது. ஆக்ஷனில் எப்போதும் போல் குறைவைக்கவில்லை.
துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த பாத்திரங்களைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் கதாபாத்திரங்களுக்கு வலுசேர்க்கும் அளவுக்கு எழுத்தில் அழுத்தம் இல்லை.
இவர்களுடன் ஜான் விஜய், ஜெயப்ரகாஷ், தம்பி ராமையா, அர்ஜெய் எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலானோரின் நடிப்பில் ஏதோவொரு மிகைத்தன்மை வழிந்தோடுகிறது.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை சில இடங்களில் மாஸ் ஏற்றினாலும், படம் முழுவதையும் தாங்கும் பலமாக அது மாறவில்லை. பாடல்களும் தனித்து கவனம் ஈர்க்கவில்லை.
ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு, ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் பகுதிகளில் வலுசேர்க்கின்றன. ஆனால், என்.பி. ஸ்ரீகாந்தின் எடிட்டிங் இன்னும் இறுக்கமாக இருந்திருக்கலாம். தேவையின்றி நீளும் காட்சிகளையும், குறிப்பாக ஃப்ளாஷ்பேக் பகுதியையும் கணிசமாகக் குறைத்திருக்கலாம்.
இரட்டை வேடம், குடும்ப சென்டிமென்ட், நல்லது செய்யும் கேங்ஸ்டர், வின்டேஜ் சாங் ஃபைட், அதிரடி கிளைமாக்ஸ் என ஹிட்டடித்த கமர்ஷியல் சினிமாவில் அத்தனை அம்சங்களையும் ஒரே படத்துக்குள் கொண்டுவர முயன்றிருக்கிறார் இயக்குநர் விஷால். ஆனால், இவை ஒன்றோடு ஒன்று இயல்பாக இணையாததால் கோர்வையான திரைக்கதை என்று ஒன்று உருவாகவே இல்லை.
பல காட்சிகளின் லாஜிக்கும் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன. புதிய கார் ஒன்று வாங்க திணறும் விஷால், திடீரென செகண்ட் ஹேண்டில் B.M.W கார் வாங்குவது எல்லாம் செம போங்கு. இப்படி குறிப்பிடும் படி நிறைய காட்சிகள் படம் முழுக்க இருக்கின்றன.
காமெடியும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. சித்ரா லட்சுமணன், தம்பி ராமையா இடம்பெறும் காமெடி காட்சிகள் எதுவுமே சிரிப்பை வரவழைக்கவில்லை. மீனவப் பெண்கள் கிளைமாக்ஸ் சண்டைக்குள் இறங்குவது போன்ற மாஸ் தருணங்களும் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
போலி கார் உதிரிபாகங்களின் கடத்தல் என்ற முக்கியமான பிரச்னையைப் பேச முயலும் படம், அதைப் பற்றிச் சில வசனங்களைப் பேசிவிட்டு இறுதியில் உண்மைச் செய்திகளின் தொகுப்பைக் காட்டுவதோடு நிறுத்திக்கொள்கிறது.
அதைத்தாண்டி அந்தப் பிரச்னைக்கு திரைக்கதையில் எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை.
இரண்டாம் பாதியில் வரும் நீண்ட ஃப்ளாஷ்பேக் ரொம்பவே சோதிக்கிறது. லிங்காவின் பின்னணியையும் அவரது குடும்பத்தையும் விளக்குவதற்காக நீளமாகச் சொல்லப்படும் இந்தப் பகுதி, கதைக்குத் தேவையான உணர்வையோ அழுத்தத்தையோ சேர்க்கவில்லை.
விஷால், அஞ்சலி காதல் காட்சிகளிலும் எவ்வித சுவாரஸ்யமும் இல்லை. இவை அனைத்தும், ஏற்கெனவே நீண்டுகொண்டிருக்கும் படத்தின் வேகத்தை மேலும் குறைக்கிறது.

பெரிய கேன்வாஸில் ஒரு மாஸ் கமர்ஷியல் என்டர்டெய்னரை உருவாக்க வேண்டும் என்ற விஷாலின் நோக்கம் திரையில் தெரிகிறது. ஆனால், அதற்குத் தேவையான இறுக்கமான திரைக்கதையும் காட்சிகளுக்கிடையேயான கோர்வையும் இல்லாததே பெரிய பின்னடைவு.
மொத்தத்தில், தலையை அலங்கரிக்க வேண்டிய ‘மகுடம்’, பார்வையாளர்களின் தலையில் பாரமாகக் கனக்கிறது.
















