`ஒரு இன்ஸ்டா ஸ்டோரி, 5 வருட தடை!' கேத்தன் கொலையை கிண்டலடித்த பெண் மருத்துவரால் ச...
Mbappe : இரட்டை கோல் மூலம் மெஸ்ஸியை நெருங்கிய எம்பாப்பே - ஸ்வீடனை ஊதித்தள்ளி முன்னேறிய பிரான்ஸ்!
2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 32 அணிகள் மோதும் நாக்-அவுட் சுற்றில், கேப்டன் கிலியன் எம்பாப்பேவின் அசாத்தியமான ஆட்டத்தால், ஸ்வீடனை 3-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 16) பிரான்ஸ் அணி கம்பீரமாக முன்னேறியது.
நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில், பிரான்ஸ் அணியின் வெற்றிக்கு எம்பாப்பே அடித்த இரண்டு கோல்களே முக்கிய காரணமாக அமைந்தன. தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த போட்டியில் கலந்துகொள்ளாத பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் அணிக்குத் திரும்பியது, வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்தது. அவரது வழிகாட்டுதலில், பிரான்ஸ் அணி திட்டமிட்டு ஸ்வீடனின் கடினமான தடுப்பாட்டத்தை உடைத்தெறிந்தது.

சாதனைகளை உடைத்தெறிந்த எம்பாப்பே!
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்புவரை, உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றுகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களான பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோ மற்றும் லியோனிடாஸ் (தலா 8 கோல்கள்) ஆகியோரின் சாதனையை எம்பாப்பே சமன் செய்திருந்தார்.
ஆனால், இந்தப் போட்டியில் 45 மற்றும் 74-வது நிமிடங்களில் கோலடித்து, நாக்-அவுட் சுற்றுகளில் தனது கோல் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தினார். இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் நாக்-அவுட் சுற்றுகளில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற தனித்துவமான சாதனையை எம்பாப்பே தன்வசப்படுத்தியுள்ளார்.
முக்கியமான போட்டிகளில் அழுத்தம் அதிகரிக்கும்போது, அவரது ஆட்டம் மெருகேறுவது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
தங்கக் காலணி போட்டி... மெஸ்ஸியை நெருங்கும் எம்பாப்பே!
இந்த உலகக் கோப்பைத் தொடரில் எம்பாப்பேவின் கோல் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், தங்கக் காலணிக்கான போட்டியில் அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். மேலும், உலகக் கோப்பை போட்டிகளில் வெறும் 18 போட்டிகளில் 18 கோல்களை அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற மெஸ்ஸியின் சாதனையை (29 போட்டிகளில் 19 கோல்கள்) முறியடிக்க, எம்பாப்பேவுக்கு இன்னும் ஒரு கோல் மட்டுமே தேவை.

சரித்திரம் படைத்த பிரான்ஸ் அணி!
தனிப்பட்ட வீரர்களின் சாதனைகள் ஒருபுறம் இருக்க, பிரான்ஸ் அணியும் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் மூன்று அல்லது அதற்கு மேல் கோல்களை அடித்த முதல் அணி என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது. இந்தத் தகவலை ஃபிஃபா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. இது பிரான்ஸ் அணியின் அசைக்க முடியாத தாக்குதல் ஆட்டத் திறனுக்குச் சான்றாக அமைந்துள்ளது.
போராடிய ஸ்வீடன் அணி இந்தத் தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேற, பிரான்ஸ் அணி மிகுந்த நம்பிக்கையுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் ஜூலை 4-ம் தேதி நடைபெறும் அடுத்த போட்டியில், பராகுவே அணியை பிரான்ஸ் எதிர்கொள்கிறது.


















