Anand Megalingam: Visa நிராகரிப்பு டு NASA..! ஒரு டிராக்டர் ஓட்டுநர் மகனின் 'வேற...
`MRP விலைக்கு விற்க தயார்; கடை நிர்வாக செலவுகளை முழுமையாக அரசு ஏற்குமா?' - டாஸ்மாக் பணியாளர்கள்
தமிழகத்தில் தவெக ஆட்சி பதவியேற்றதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோவில், பள்ளிகள் போன்ற பகுதியில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்கள், மேலாளர்கள் செயல்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் அனைத்து விதமான மதுபானங்களும் எம்.ஆர்.பி விலைக்கே விற்பனை செய்யப்படும். மது பிரியர்கள் கடைகள் முன்பு வரிசையாக நின்று சரியான சில்லறையை கொடுத்து மது வகைகளை வாங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் வாங்கிய மது வகைகளுக்கு சரியான பில் வாங்கிக் கொள்ளவும் உள்ளிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள வழி காட்டுதல் நெறிமுறைகள் அடங்கிய பிளக்ஸ் பேனரை டாஸ்மாக் கடை ஊழியர்கள் தங்களது கடைகளில் ஒட்டி வைத்தனர்.
இது தொடர்பாக, அனைத்து டாஸ்மாக் கடைகளின் பணியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பு கூட்டு குழு நிர்வாகி தமிழ்ச்செல்வனிடம் பேசுகையில்,
"நாமக்கல் மாவட்டத்தில் 169 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. இதில் மாவட்டம் முழுதும் 10 கடைகள் மூடப்பட்டுள்ளது. இது போல தமிழகத்தில் 710 கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த பணியாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்பட வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை விடுத்த அவர், ``மதுபான பாட்டில்களை எம்ஆர்பி விலைக்கு விற்க நாங்க தயார் !.. டாஸ்மாக் கடைகளில் மாசம், மாசம் நடக்கும் நிர்வாக செலவுகளை முழுமையாக ஏற்க அரசு தயாரா?" எனக் கேள்வி எழுப்பினார்.
``பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க கூடாது என்பதை ஏற்கிறோம். வரவேற்கிறோம். நேர்மையான முதல்வர் நேர்மையான ஆட்சியில் நாங்களும் இனி நேர்மையாக இருக்கிறோம். ஆனால், அரசு செய்ய வேண்டிய வேலை மற்றும் செலவுகள் எங்கள் தலையில் போடப்பட்டது.

ஒவ்வொரு கடையிலும் அதன் நிர்வாக செலவுகளை இதுவரை நாங்கள் செய்து வருகிறோம். அதாவது, டாஸ்மாக் கட்டத்தின் வாடகை பாதி நாங்கள் தருகிறோம். மின்கட்டணத்தில் பாதி நாங்க கட்டுகிறோம், வாரத்தில் 2 முறை வரும் சரக்கு லோடு இறக்கும் கூலி 4000 முதல் 5000 வரை நாங்கள் தான் கொடுக்கிறோம்.
இவை அல்லாமல் உயர் அதிகாரி பார்வையிடும் போது என பல்வேறு பார்மாலிட்டிஸ் செலவுகளை இனி அரசே செய்து கொடுக்கட்டும். இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கு வதை நிறுத்திக் கொள்கிறோம்" என்றார்.
மேலும், ``டாஸ்மாக் கடை பணியாளர்கள் கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் களையும் அட்டைப் பெட்டிகளை வைக்கவும் போதிய இடவசதியை ஏற்படுத்தி தர வேண்டும்" என்றார்.















