அமெரிக்கா: `பிறப்புக் குடியுரிமை' - அதிபரின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்...
MTC பேருந்தில் பயணிக்கு வந்த வலிப்பு; துரிதமாகச் செயல்பட்ட நடத்துநர்; சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்!
சென்னையில் ஓடும் பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான சுவாரசியமான, நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறுவது வழக்கம். ஆனால், சமீபத்தில் கிளாம்பாக்கம் - திருவான்மியூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட மாநகரப் பேருந்தில் (MTC) நடத்துனரும், ஓட்டுநரும் காட்டிய மனிதாபிமானம் ஒட்டுமொத்த சென்னைவாசிகளின் இதயங்களையும் நெகிழச் செய்துள்ளது.
சமூக ஊடகங்களில் இது தொடர்பான வீடியோ வெளியாகி, தற்போது வைரலாகி வருகிறது.
நேற்று சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் தடம் எண் 91 பேருந்து, வழக்கம்போல் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கிப் புறப்பட்டது. இந்தப் பேருந்தில் லக்ஷ்மனன் என்பவர் நடத்துனராகப் பணியில் இருந்தார்.

பேருந்து இரும்புலியூர் நிறுத்தத்தை அடைந்தபோது, அங்கு ஒரு பெண் பயணி பேருந்தில் ஏறியுள்ளார். சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணுக்குத் திடீரென வலிப்பு போன்ற உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமையை உணர்ந்த அந்தப் பெண், உடனடியாகத் தன் வசம் இருந்த மாத்திரையை எடுத்து உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்து பதறிய சக பயணிகள், உடனடியாக பேருந்தை அருகில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, அங்கு அவரை அனுமதிக்கலாமா என்று கேட்டுள்ளனர். ஆனால், அந்தப் பெண்ணோ, "நான் மாத்திரை போட்டுவிட்டேன், என்னை நானே சமாளித்துக் கொள்வேன்" என்று கூறி பயணிகளையும் நடத்துனரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.
ஆனால், பேருந்து அங்கிருந்து புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே, அந்தப் பெண்ணுக்கு மீண்டும் மிகக் கடுமையான முறையில் வலிப்பு ஏற்பட்டு, அவர் பேருந்திலேயே மயங்கி விழுந்தார். நிலைமை கையை மீறிப் போவதை உணர்ந்த நடத்துநர் லக்ஷ்மனன் மற்றும் ஓட்டுநர் இருவரும் ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை. ஓட்டுநர் உடனடியாக பேருந்தை மாற்றுப் பாதையில் திருப்பி, தாம்பரம் அரசு மருத்துவமனை நோக்கி மின்னல் வேகத்தில் செலுத்தினார்.
மருத்துவமனையை அடைந்ததும், நடத்துனரும் பயணிகளும் இணைந்து அந்தப் பெண்ணை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால், அந்தப் பெண்ணுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

பேருந்து திடீரென திருப்பப்பட்டு, அரசு மருத்துவமனைக்குச் சென்ற இந்த ஒட்டுமொத்த பரபரப்பான காட்சிகளையும், பேருந்து ஊழியர்களின் மனிதாபிமானச் செயலையும் அங்கு இருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
"நேரத்தோடு ஓட வேண்டும்" என்ற போக்குவரத்து விதிகளையும் தாண்டி, ஒரு சக மனித உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து சாதுரியமாகச் செயல்பட்ட நடத்துனர் லக்ஷ்மனன் மற்றும் அந்தப் பேருந்தின் ஓட்டுநரின் செயல் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.














