"மக்களுக்கு என்மீதிருக்கும் நம்பிக்கைதான் எனக்கான வெற்றி"- குன்னம் தொகுதியைத் தக...
PBKS vs LSG: `தேன் கூட்டில் கை வைத்த ரிஷப் பன்ட்' - அடித்து ஆடிய பஞ்சாப்; அடி வாங்கிய லக்னோ!
ஐ.பி.எல்-இல் இப்போதைய நிலையில் அசைக்கவே முடியாத அணியாக, புள்ளி பட்டியலில் தோல்வியே காணாமல் முதலிடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியும், எப்படியாவது மேலே வந்து விட மாட்டோமா? என்ற எண்ணத்தில் 8வது இடத்தில் இருக்கும் லக்னோ அணியும் நேற்று (ஏப்ரல் 19)முலன்பூர் மைதானத்தில் மோதின.

டாஸ் ஜெயித்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட், கொஞ்சம் யோசித்திருக்கலாம். "நாங்க முதல்ல பந்துவீசுறோம்" என அவர் சொன்னது, அவரே தனக்குத்தானே வைத்துக் கொண்ட ஆப்பு என்பது அப்புறம்தான் தெரிந்தது. இப்போது இருக்கும் பஞ்சாப் அணிக்கு எதிராக பவுலிங் எடுப்பது, தேன் கூட்டில் கை வைப்பதற்கு சமம் எனப் புரிய வைத்தார்கள் பஞ்சாப் ஓப்பனர்கள்.
பவர் பிளேகளில் ஆபத்தான பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இப்போது பிரியான்ஸ் ஆர்யாவும் சேர்ந்து இருப்பதால், அவரை எப்படியாவது அவுட் ஆக்கி விட வேண்டும் என லக்னோ திட்டம் தீட்ட, அந்த திட்டத்தை எல்லாம் கட்டம் கட்டி தகர்த்து எறிந்தார். இவருடன் இப்போது கூப்பர் கான்லியும் சேர்ந்து, லக்னோ பவுலர்களை பாவம் பார்க்காமல் பொளந்து எடுத்தார். அவ்வப்போது இளம் பவுலர்களுக்கு சீனியர் முகம்மது சமி அறிவுரை கூற, அடுத்து அவர் ஓவரிலேயே அடி பிரித்து எடுத்து கொண்டிருந்தனர் இந்த ஜோடி.

13 ஓவர்களுக்கு 179 என்ற நிலையில் அணியின் ஸ்கோர் இருக்க,
300 ரன்களை கடந்து சாதனை படைக்க போகிறது இந்த போட்டி என எதிர்பார்த்து காத்திருக்க, பிரின்ஸ் யாதவ் வீசிய 14வது ஓவரில் கூப்பர் கான்லி 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரிலேயே பிரியான்ஸ் ஆர்யாவும் 93 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அப்படியே லக்னோ அணி மொமென்டத்தை தன் பக்கம் கொண்டு வந்தது. அவ்வப்போது ஓனர் சஞ்சீவ் கோயன்கா கண் முன் வந்து செல்வார் போல, விக்கெட்கள் விழுந்தாலும் பதட்டத்திலேயே இருந்தார் கேப்டன் ரிஷப் பண்ட்.
நல்ல வேளை, மிடில் ஆர்டரில் இறங்கிய பேட்டர்கள் யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால், அடுத்தடுத்து விழுந்த விக்கெட்களின் மூலம் இருபது ஓவர்களில் 254 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி.
நாமளே பேட்டிங் ஆடியிருந்தா ஒரு 180-ல் நிறுத்திருப்போம், இப்போ இவங்க அடிச்ச 254-ஐ எப்படி சேஸ் பண்றது?" என ரிஷப் பண்ட் மைண்ட் வாய்ஸ் மைதானம் முழுக்கக் கேட்டது. இமாலய இலக்கை நிர்ணயித்த பஞ்சாப் அணி, லக்னோவின் 'லக்'-கை ஆரம்பத்திலேயே காலி செய்துவிட்டது.
ஜெயிக்கிறமோ தோக்குறமோ முதல்ல சண்ட செய்யணும் என்ற எண்ணத்தில், லக்னோ ஓப்பனர்கள் மிச்சல் மார்ஷ் மற்றும் பதோனி இணையினர் இந்த இமாலய ஸ்கோரை பவர் பிளேவிலிருந்தே அதிரடியாக தொடங்கினர். ஆனால் 6வது ஓவரின் கடைசி பந்திலேயே பதோனி 35 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் தனது பழைய ஃபார்மில் ஆட்டத்தை ஆரம்பித்து, ஒற்றைக் கை ஷாட்களின் மூலம் லக்னோ ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து கொண்டிருந்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நிற்காமல், மார்ஷ் மற்றும் பண்ட் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.

இந்த விக்கெட்களின் மூலம் மிஞ்சி இருந்த நம்பிக்கை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வந்தது.அடுத்து வந்த பேட்டர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆக,
கடைசியில் எய்டன் மார்க்ரம் ஒரு குட்டி கேமியோ ஆடி, லக்னோவை 200 ரன்கள் வரை அழைத்துச் சென்றார். ஆனாலும், தோல்வி தவிர்க்க முடியாததானது.
இந்த மேட்ச் ரிசல்ட்டால் பஞ்சாப் ரசிகர்களை விட சென்னை ரசிகர்கள்தான் செம ஹேப்பி. ஏன்னா, லக்னோ ஜெயிச்சிருந்தா புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே-வை பின்னுக்குத் தள்ளியிருக்கும். இப்போ சென்னை 7வது இடத்திலேயே 'சேஃப்' ஆக இருக்கிறது, லக்னோ 8வது இடத்திலேயே தங்கிவிட்டது.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து முதலிடத்திலேயே அசைக்க முடியாத அணியாக நீடிக்கிறது ஷ்ரேயஸ் தலைமையிலனா பஞ்சாப் கிங்ஸ்.!





















