மும்பை: மனைவியை Rooster Position இல் நிற்க வைத்து சித்திரவதை; கொடூர கிரிமினல் கண...
Peddi: ``சினிமாவின் உச்சத்தை விட்டுவிட்டு பொதுச்சேவைக்கு வந்த முதல்வர் விஜய்" - ராம் சரண் வாழ்த்து
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கித்தில் உருவாகியிருக்கும் 'பெத்தி' திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார்.
ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜூன் 4-ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது. பெத்தி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் ராம் சரண், `` சென்னைக்கு வரும்போதெல்லாம் சில நேரங்களில் என்ன பேசுவதென்றே தெரியாத ஒரு உணர்ச்சிப்பூர்வமான தருணம் எனக்குள் ஏற்படும். நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே இந்தச் சென்னையில்தான்.
அதனால் 'மகதீரா', 'ஆர்.ஆர்.ஆர்' போன்ற எனது படங்களின் விளம்பரத்திற்காக இங்கு வரும்போதெல்லாம், எனது சொந்த ஊருக்குள் நுழைந்தது போன்ற ஒரு ஃபீலிங் கிடைக்கும். எனது தாயார் பிறந்த ஊர் என்பதால், எப்போதும் என் தாயின் நகரத்திற்குள் வருவதாகவே நான் உணர்கிறேன்.
இப்படத்தின் பணிகளை முடிக்க எங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆனது. ஆனால், இயக்குநர் புச்சி பாபு இந்த ஒரே ஒரு கதையின் மேல் ஐந்து வருடங்கள் உழைத்திருக்கிறார். நான் ஏதோ கஷ்டப்பட்டு நடித்ததாக எல்லாரும் சொல்கிறார்கள், ஆனால் நல்ல கதையும், புச்சி பாபுவின் எழுத்தும், சுகுமார் சாரின் வழிகாட்டுதலும் இருக்கும்போது எனக்கு எந்தக் கஷ்டமும் தெரியவில்லை.
இந்த 'பெத்தி' என்கிற வீட்டிற்கு நாங்கள் தூண்களாக இருந்தால், இதன் மையத்தூணாக விளங்குபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சார்தான். கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக அவர் தூக்கமே இல்லாமல், அதிகாலை 6 மணி வரை நமக்காக உழைத்திருக்கிறார். ரஹ்மான் சார் போன்ற லெஜண்டுகளுடன் இணைந்து பணியாற்றுவதே ஒரு தனி உத்வேகம்.

இப்படத்தில் இணைந்துள்ள சிவ ராஜ்குமார் சார் ஸ்கிரீனில் தோன்றினாலே அங்கே நெருப்பு பறக்கும். நான் 'ஜெயிலர்' படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது. கார் ஷாட், அந்த ஸ்லோ மோஷன், பீடி குடிக்கும் காட்சி என எல்லாமே ஐகானிக்.
அவர் பேசும் வார்த்தைகளை விட, அவரது கண்களும் எக்ஸ்பிரஷன்களும் பல விஷயங்களைச் பேசும். அவருடன் நடித்ததை எனது பாக்கியமாகக் கருதுகிறேன். ஒளிப்பதிவாளர் ரத்னவேலு சாருடன் இது எனக்கு நான்காவது படம். ரஜினி சார், கமல் சார், ஷங்கர் சார் எனப் பெரிய ஆட்களுடன் பணியாற்றிய சீனியாரிட்டி எதையுமே காட்டாமல், செட்டில் மிகவும் எளிமையாக எங்களிடம் பழகுவார்.
படத்தின் நிறமாக, அழகு சேர்க்கும் பாத்திரமாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். இந்தத் திரைப்படத்தை மிகவும் காதலித்து பண்ணியிருக்கிறேன். வழக்கமாக நான் ஆர்.ஆர்.ஆர், ரங்கஸ்தலம், மகதீரா போன்ற படங்கள் பண்ணும்போதுதான் ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்து என் அம்மாவிடமும் நண்பர்களிடமும் அதைப்பற்றியே ஓயாமல் பேசிக்கொண்டிருப்பேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது 'பெத்தி' படத்தின் எக்ஸ்பீரியன்ஸ் பற்றித்தான் வீட்டில் தொடர்ந்து பேசி வருகிறேன். படம் கண்டிப்பாக ஒரு பிளாக்பஸ்டராக அமையும் என்பதற்கு இந்த ஒன்றே எனக்குப் போதும்.
இறுதியாக, தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது சினிமா கரியரின் உச்சத்தில் இருக்கும்போதே, அத்தனை ஸ்டார்டம், புகழையும் மக்களுக்காக விட்டுவிட்டு, பொதுச் சேவைக்கு அவர் வந்திருக்கிறார்.
சினிமா துறையைச் சேர்ந்த ஒருவனாக, தமிழ்நாடு மக்களுக்கும் விஜய் சாருக்கும் எனது வாழ்த்துகள். விளையாட்டுப் படம் என்பதால் இதில் மூன்று விதமான உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள் தேவைப்பட்டன. குஸ்தி சண்டைக் காட்சிகளில் எனக்குக் கையில் கொஞ்சம் அடிபட்டது, அவ்வளவுதான்.
சென்னை ரசிகர்கள் மிகவும் தனித்துவமானவர்கள். அவர்களின் அன்பிற்கு ஈடு இணையே இல்லை. சிறந்த படங்களை எப்படி ரசிக்க வேண்டும், எப்படி டிசிப்ளினாக இருக்க வேண்டும் என்பதை தமிழக கலாசாரத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
காலையிலேயே டிபன் சென்டரில் அகர்பத்தி ஏற்றி, சுத்தமாகத் தயார் செய்வதில் தொடங்கி, தியேட்டர்களில் படம் பார்த்துவிட்டு அவர்கள் கொடுக்கும் கிளீனான ரிவ்யூ வரை தமிழ்நாடு ஆடியன்ஸ் என்னை எப்போதும் வியக்க வைக்கிறார்கள்.
இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். 'பெத்தி' திரைப்படம் என் லைப் டைம் லைப்ரரியில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு படமாக இருக்கும்" என உணர்ச்சிகரமாகக் பேசினார்.














