T20 World Cup: "இந்தியாவுடன் விளையாடுகிறோம்; ஆனால்" - ஐசிசிக்கு பாகிஸ்தானின் நிப...
RSS: ``75 வயதைக் கடந்துவிட்டேன்... தலைவர் பதவிக்கு சாதி ஒரு அளவுகோல் அல்ல" - மோகன் பகவத் ஓப்பன் டாக்
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று டெல்லியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ``ஆர்.எஸ்.எஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் இல்லை. பிராந்தியம் மற்றும் கோட்டத் தலைவர்களே, ஆர்.எஸ்.எஸ் தலைவரை நியமிக்கின்றனர். பொதுவாக, 75 வயதுக்குப் பிறகு எந்தப் பதவியும் வகிக்காமல் பணியாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது.

எனக்கு 75 வயது நிறைவடைந்துவிட்டது. அதை ஆர்.எஸ்.எஸ்-க்குத் தெரிவித்தேன். ஆனால், அமைப்பு தொடர்ந்து பணியாற்றும்படி என்னிடம் கேட்டுக்கொண்டது. ஆர்.எஸ்.எஸ் எப்போது பதவி விலகச் சொல்கிறதோ, அப்போது நான் விலகிவிடுவேன். ஆனால் பணியிலிருந்து ஓய்வு பெறுவது ஒருபோதும் நடக்காது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் பதவிக்கு சாதி ஒரு அளவுகோல் அல்ல. அவர் இந்துவாக இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைப் பின்பற்றுவதில்லை. தொண்டர்கள் தங்கள் பணியின் அடிப்படையில் பதவி உயர்வு பெறுகிறார்கள்.
சாதி பேதமின்றி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார். நான் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தால், ‘கிடைக்கும் சிறந்த வேட்பாளர்’ என்ற அளவுகோலின்படியே தேர்ந்தெடுப்பேன். பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பது ஒரு தகுதியிழப்பு அல்ல. அதேபோல் பிராமணராக இருப்பது ஒரு தகுதி அல்ல. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பணி என்பது தனிமனித ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை (சம்ஸ்காரம்) விதைப்பதுதானே தவிர, வெற்றுப் பிரச்சாரங்களைச் செய்வது அல்ல. அதிகப்படியான விளம்பரம் மற்றும் பிரச்சாரம் ஒரு கட்டத்தில் ஆணவத்திற்கு வழிவகுத்துவிடும்.

விளம்பரம் என்பது எப்போதும் அளவாகவும், சரியான நேரத்திலும் மட்டுமே இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் தனது தொண்டர்களிடமிருந்து கடைசி சொட்டு இரத்தம் வரை வேலை வாங்குகிறது. இங்கே யாருக்கும் ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் செயல்பாடுகளில் ஆங்கிலம் ஒருபோதும் முதன்மையான தகவல் தொடர்பு மொழியாக இருக்காது. ஆங்கிலம் ஒரு இந்திய மொழி அல்ல என்பதால், தேவைப்படும் இடங்களில் மட்டுமே அது பயன்படுத்தப்படும்.
ஆர்.எஸ்.எஸ் எந்தவொரு குறிப்பிட்ட சாதியையோ அல்லது சமூகத்தையோ குறிவைத்துச் செயல்படுவதில்லை. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தேவைப்படும் வரை தொடர வேண்டும். ஊழல் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இல்லை, அது மக்களின் மனதில்தான் உள்ளது. ஊழலுக்கு எதிராகப் போராடும் எவருக்கும் ஆர்.எஸ்.எஸ் முழு ஆதரவை வழங்கும். இது தொடர்பாகப் போராடுபவர்களுக்கு உதவுமாறு எங்கள் தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவியவர்களைக் கண்டறிந்து, அது குறித்து அதிகாரிகளுக்கு பொதுமக்களும் தகவல் தெரிவிக்க வேண்டும்." என்றார்.















