TVK வை அட்டாக் பண்ணலைன்னா... | எடப்பாடியை எச்சரிக்கும் KC Palanisamy interview |...
SIR: ராகுல் காந்தி விடுத்த சவால்; ஆவேசமான அமித் ஷா - மக்களவையில் காரசார விவாதம்!
நாடாளுமன்ற லோக் சபாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று SIR குறித்த விவாதங்கள் அமித் ஷா, ராகுல் காந்தி இடையே காரசாரமாக நடந்திருக்கிறது.
நேற்று (டிச 9) மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "நாட்டில் வாக்குத் திருட்டு நடக்கிறது, ஜனநாயகம் துண்டாடப்பட்டிருக்கிறது; சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் (SIR) முறைகேடுகள், வாக்குத் திருட்டுகள் பல நடந்திருக்கின்றன.
RSS ஜனநாயகத்தின் தூணாக இருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தைக் கைப்பற்றி சட்டத்திற்கு எதிராக நடந்து வருகிறது. பிரதமரும், அமித் ஷாவும் இந்திய தேர்தல் ஆணையத்த்தை சுதந்திரமாகச் செயல்படவிடுவதில்லை" என்று குற்றச்சாட்டிப் பேசியிருந்தார்.

இன்றைய மக்களவையில் இதற்குப் பதிலளித்துப் பேசியிருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, "SIR பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று நான் இன்னும் நம்புகிறேன். ஆனால் 'தேர்தல் சீர்திருத்தங்கள்' என்று வரும்போது அதுபற்றிய எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம். பதில் சொல்லாமல் நாங்கள் அதிலிருந்து எங்கும் ஓடி ஒளிய மாட்டோம் என்பதை இங்குச் சொல்லிக் கொள்கிறோம்.
SIR நடைமுறை நாங்கள் முதன்முதலில் கொண்டுவந்தது அல்ல. முதல் SIR, 1952-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் 1957, 1961, 1965-66, 1983-84 ஆண்டுகளில் இது நடத்தப்பட்டது. தேர்தல் ஆணையம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதை நடத்துகிறது.

ஹரியானாவில் ஒரு வீட்டில் 501 வாக்குகள் இருப்பதாக ராகுல் காந்தி கூறினார். 265-வது வீடு ஒரு சிறிய வீடு அல்ல என்றும், ஒரு குடும்பம் ஒரு ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியது. வீட்டிற்கு எண் இல்லை, மூன்று தலைமுறைகள் அந்த வீட்டில் வசித்து வருகின்றன. அவர்கள் போலி வீடும் அல்ல, மோசடி வாக்காளர்களும் அல்ல.
அமித் ஷாவின் பேச்சிற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, "அமித் ஷா ஜி ஹரியானா பற்றிப் பேசினார். அவர் ஒரு உதாரணத்தைக் குறிப்பிட்டார். இதுபோல வேறு பல முறைகேடுகள் நடந்ததற்கான உதாரணங்களும் ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. ஹரியானாவில் 19 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர்.
இதுபற்றி என்னுடன் விவாதிக்க அமித் ஷா ஜி பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வரத் தயாரா?" என்று சவால் விடுத்தார் ராகுல்.

அதற்கு அமித் ஷா, "எதிர்க்கட்சித் தலைவர் முதலில் எனது பதில்களை பொறுமையாக காது கொடுத்துக் கேட்க வேண்டும். நான் எதைப் பேச வேண்டும், எங்கு பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன். அதை நீங்கள் சொல்லக் கூடாது. மக்களவையில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். மக்களவையின் விவாதத்தை எங்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்லக் கூடாது. உங்கள் விருப்பதிற்குகெல்லாம் மக்களவை செயல்படாது" என்றார் அமித் ஷா.
பீகார் தேர்தல் குறித்துப் பேசிய அமித் ஷா, "பீகாரில் உங்கள் தேர்தல் பேரணிகளின்போது 'வாக்குத் திருட்டு (vote chori)' என்று மக்களிடையே பிரசாரம் செய்தீர்கள். ஆனாலும் நீங்கள் தேர்தலில் தோற்றீர்கள்.
உங்கள் தோல்விக்குக் காரணம் உங்களின் தலைமையும், கட்சியின் செயல்பாடுகளும்தான். EVM அல்லது வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் (SIR) காரணமல்ல.
நான் சொல்வது தவறு என்று நினைத்தால், உங்களது காங்கிரஸ் கட்சிக்காரர்களே ஏன் அத்தனை தேர்தல்களில் தோற்றோம் என்பதற்கானக் காரணத்தைக் கண்டுபிடித்து உங்களுக்குச் சொல்வார்கள், உங்களிடம் கேள்வி கேட்பார்கள்" என்று பேசியிருக்கிறார் அமித் ஷா.
















