அதிமுக பொதுக்குழு: மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் குழம்பு - கம...
``SIR வரவேற்பு, நீதித் துறையை மதிக்காத திமுக"- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் என்னென்ன?- முழு விவரம்
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் குறித்தும், தி.மு.க அரசுக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுப்பது குறித்தும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் உரையாற்றி தீர்மானத்தை வாசித்தார். அவரின் உரையில், ``கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்களின் பாதம் பணிந்து வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்.
தமிழ்நாட்டு மக்களுடைய நல்லாட்சியோடு நான்கரை ஆண்டு காலம் எதிர்ப்புகளுக்கும், துரோகங்களுக்கும் மத்தியிலே பொற்கால ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி. இன்றைக்கு தமிழகத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்ற சர்வாதிகாரத்தை எதிர்த்து 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்கிற பயணத்தை தொடங்கி, இதுவரை 175 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு கோடி மக்களை நேரிலே சந்தித்தவர்.
அவரின் ஆசியோடும், உங்களின் ஆதரவோடும் தீர்மானத்தை வாசிக்கிறேன்.
பொது எதிரியை வீழ்த்த, ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு, தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், கழகம், பாஜக-வுடன் வெற்றிக் கூட்டணி அமைத்ததற்கு, 2.5.2025 அன்று நடைபெற்ற கழக செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இப்பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கிறது !

வருகின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' தலைமை தாங்குகிறது! கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களுக்கு, இப்பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது.
கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில்
(i) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையிலும், தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையிலும், மாண்புமிகு அம்மா அவர்களுடைய அறிவிப்பின்படி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது! கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதலை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்களோடு அனுப்பாத விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற போக்கிற்கு கண்டனம்!
(ii)சேலம், கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் 'பஸ் போர்ட்' அமைக்க வலியுறுத்தல்!
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழையின் போது, தொடர்மழை, கனமழை, வெள்ளம், புயல் காற்று போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்ற போதும், இயற்கைப் பேரிடரை பாதுகாப்பாக எதிர்கொள்ளவும், பாதுகாப்பதிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்ற ஸ்டாலின் திமுக அரசு!
ஜனநாயகத்திற்கு தேர்தல் ஒரு பொன் மகுடமாகும். மக்களாட்சித் தத்துவத்திற்கு ஆதாரமாக விளங்குவது மக்களின் வாக்குரிமையே ஆகும்! அத்தகைய வாக்குரிமையை நிலைநிறுத்தும் வாக்குப் பதிவு முறையாகவும், சரியாகவும் திகழ வேண்டும் என்பதாலேயே, சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (S.I.R.) கழகம் வரவேற்கிறது! முறைகேடான வாக்காளர் பட்டியல் மற்றும் தில்லு முல்லுகளை நீக்கி, தகுதியான வாக்காளர்களைக் கொண்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.
(i) விவசாயிகள் விளைவித்த நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்து, விவசாயிகளைப் பாதுகாக்கவும், நெல்லின் ஈரப் பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கு, மத்திய அரசின் ஆணையைப் பெற்று, நெல் கொள்முதலை முறையாக, முழுமையாக செய்து முடிக்க வழிவகை செய்து, விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று விடியா தி.மு.க. அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது!
(ii) தஞ்சை தரணிக்கு துரோகம் இழைத்து, 'தானும் டெல்டாக்காரன்' என்று தம்பட்டம் அடித்து, வேருக்கு வெந்நீரையும், விவசாயிகளுக்கு கண்ணீரையும் தொடர்ந்து தந்து வரும் ஸ்டாலினுக்கு கண்டனம் !
அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்! குறையும் முதலீடுகள்! |இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள்! தமிழக இளைஞர்களுக்கு எட்டாக்கனியான வேலை வாய்ப்புகள்!
தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி, பொய் புரட்டு போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்!
தமிழ் நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து வருவது வேதனை அளிக்கக்கூடிய நிகழ்வாகும்! காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற போக்கிற்கு கண்டனம்
படுபாதாளத்திற்குச் செல்லும் தமிழ் நாட்டின் நிதி நிலைமை! கடன் தொகையில் மூலதனச் செலவு செய்யாமல், வருவாய் செலவினத்திற்கு ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு, தமிழக மக்களைத் தொடர்ந்து நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஃபெயிலியர் மாடல் அரசுக்கு கடனாளிகளாக்கும் கண்டனம்!
சட்டம்-ஒழுங்கு சரிந்து கிடக்கிறது ! தொடரும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் புழக்கம், கூலிப் படையை ஏவிவிட்டு கொலை, கடத்தல், வழிப்பறி, காவல் துறையினர் முதல் அரசு வழக்கறிஞர்கள், பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகள் வரை பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருக்கும் நிர்வாகத் திறனற்ற போலி திராவிட மாடல் திமுக அரசுக்கும், பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கும் கடும் கண்டனம்!

2021-ல் 525 தேர்தல் வாக்குறுதிகளை திமுக அளித்தது! அவற்றில் மிகக் குறைவான வாக்குறுதிகளை மட்டுமே அறைகுறையாக நிறைவேற்றிவிட்டு, 'நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக்குதல், டீசல், பெட்ரோல் விலை குறைப்பு, சமையல் கேஸ் சிலிண்டர் மானியமாக ரூ. 100 வழங்குதல்' போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு, எதையும் நிறைவேற்றாமல் 'எல்லோருக்கும் எல்லாம்' என்று ஆசைகாட்டி, அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி வருகின்ற திமுக போலி மாடல் அரசுக்கும், முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கும் கண்டனம்.
நீதித் துறை சுயமாக செயல்பட வேண்டுமென்றால் அதன் தனித் தன்மை காப்பாற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட வேண்டுமென்றால், ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக்கூடாது. மேலும், ஆட்சியாளர்கள் மிரட்டல் போக்கை கைவிட வேண்டும்; நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும்: அதோடு, நீதித் துறையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்ற மக்களின் எண்ணத்தை; எதிர்பார்ப்பை இப்பொதுக்குழு பிரதிபலிக்கிறது!
நீதித் துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது!

மீண்டும் முதலமைச்சராக்குவோம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியிலே செயல்பட்டு, அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவராகத் திகழ்ந்து வரும் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' மாண்புமிகு எடப்பாடி K. பழனிசாமி அவர்களை 2026-ல் மீண்டும் முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம்
ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக விளங்கும் நீதித் துறை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது. மக்களும் முறையான நீதியை பெறுவதற்காக, தங்களின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்களையே நாடுகிறார்கள். நீதி தேவதையிடம் நீதியை எதிர்பார்த்து மக்கள் நம்பிக்கையோடு இருந்துவரும் நிலையிலும், இன்றைய திமுக ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமான தீர்ப்பாக இருந்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு என்றும்; தங்களுக்கு பாதகமான தீர்ப்பு என்று கருதும்போது, அத்தீர்ப்பை வாங்கப்பட்ட தீர்ப்பு என்றும் விமர்சிக்கும் போக்கு, நீதித் துறையையும், நீதிபதிகளையும், சுதந்திரமாக செயல்படவிடாமல் மறைமுகமாக அச்சுறுத்துவதாக இருந்து வருகிறது.
நியாயமான தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும், தங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால், அவற்றை செயல்படுத்தாமல் காலதாமதம் செய்வது தேவையில்லாமல் அரசு நிதியை செலவு செய்து, மேல்முறையீடு என்ற வாய்ப்பைய் பயன்படுத்திக்கொண்டு தீர்ப்புகளை செயல்படுத்தாமல் முட்டுக்கட்டை போடுவது திமுக ஆட்சியின் வாடிக்கையாகிவிட்டது. அதோடு, ஆட்சிப் பொறுப்பிலே இருக்கும் முக்கிய நிர்வாகிகளே தீர்ப்புக்கு தவறான விளக்கம் கொடுப்பது தீர்ப்பை விமர்சிப்பது; அதன் வாயிலாக நீதிபதிகளை மறைமுகமாக விமர்சிப்பது
போன்ற தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது, ஆட்சியாளர்களின் நீதித் துறையை மதிக்காத போக்கையே காட்டுகிறது.

நீதித் துறை தனித் தன்மையோடு இயங்கும் உச்சபட்ச அமைப்பாகும். நீதித் துறை நிர்வாகத்திற்கென்று 'கொலிஜியம்' என்ற நீதிபதிகள் அடங்கிய அமைப்பு இருக்கிறது. கொலிஜியம் எடுக்கும் முடிவுகள் அரசுக்கு தெரிவிக்கப்படும் நிலையில், அதற்கு எந்தெந்த வகையில் முட்டுக்கட்டை போடமுடியுமோ, அந்தந்த வகையில் முட்டுக்கட்டை போட அரசே முயலுகிறது. இத்தகைய ஆட்சியாளர்களின் செயல்கள் நீதித் துறைக்கே சவால் விடுவதாக இருக்கிறது. நீதித் துறையை முடக்க நினைக்கும் ஆட்சியாளர்களின் இப்படிப்பட்ட செயல்களால், மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை குறைந்து வருவதைப் போல, நீதித் துறை மீது நம்பிக்கை குறைய ஆரம்பித்தால், மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் அபாயம் இருக்கிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல.” என குறிப்பிடப்பட்டுள்ளது.














