'வருஷநாடு பகுதி அரசு ஊழியர்கள் 118 பேர் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும்' - தேனி...
TN Assembly : 'நைட்டெல்லாம் தூங்க முடியல!' - அவையில் குமுறும் எம்.எல்.ஏக்கள்; காரணம் என்ன?
சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பலரும் 'நைட்டெல்லாம் தூங்க முடியல பேரவைத் தலைவரே...' என அவையிலேயே குமுறி வருகின்றனர். காரணம் என்ன?

மானியக்கோரிக்கையில் ஒரு நாளைக்கு 2 துறைகள் தொடங்கி 6 துறைகள் வரைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டு அவையில் விவாதிக்கப்படுகிறது. ஒரு துறை சம்பந்தமான விவாதத்துக்காக அவை கூடுவதற்கு முன்பே 'கொள்கை விளக்கப் புத்தகம்' அளிக்கப்பட வேண்டும். அந்தப் புத்தகத்தில் துறையின் தற்போதைய நிலவரம் மற்றும் திட்டங்கள் குறித்த தரவுகள் இருக்கும்.
அதை எம்.எல்.ஏக்கள் படித்துவிட்டு வந்து அவையில் பேசும்போது விரிவாக தங்களின் கருத்துகளை பேசுவார்கள். ஆனால், இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் கொள்கை விளக்கப் புத்தகம் மிகவும் தாமதமாக வழங்கப்படுவதால் அந்தப் புத்தகத்தை படித்து வர சிரமமாக இருக்கிறதென எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மின் துறை மீதான மானியக் கோரிக்கையின் போது பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 'இன்று 6 துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. ஆனால், கொள்கை விளக்கப் புத்தகம் நேற்றிரவு 10 மணிக்குதான் வழங்கப்பட்டது. 6 துறைகளுக்கும் சேர்த்து 834 பக்கங்கள் இருக்கிறது. அதை படித்து முடிக்க இரவு 3:30 மணி ஆகிவிட்டது. மூன்றரைக்கு தூங்கி ஐந்தரை மணிக்கு எழுந்தரித்து அவைக்கு வந்திருக்கிறேன். அதனால் சீக்கிரமே கொள்கை விளக்கப் புத்தகங்களை கொடுத்தால் நன்றாக இருக்கும்' என்றார்.

அதேமாதிரி, இன்று பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'இன்றைக்கு 6 துறைகளின் மீதான விவாதம் நடக்கிறது. ஆனால், கொள்கை விளக்கப் புத்தகங்கள் நேற்றிரவு 8 மணிக்குதான் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் நாங்கள் எப்படி அந்த புத்தகங்களை படித்து வந்து சீராக விவாதிக்க முடியும்?' என்றார்.
இதேமாதிரியாக நிறைய எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கொள்கை விளக்கப் புத்தகம் தாமதமாவதால் இரவு தூக்கத்தை தொலைக்கிறோம் என அவையிலேயே குமுறுகின்றனர்.
உறுப்பினர்களின் குறைகளை கேட்டுக் கொண்ட சபாநாயகர், '24 மணி நேரத்துக்கு முன்பாக கொள்கை விளக்கப் புத்தகத்தை வழங்கக்கோரி அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்துகிறேன்' என்றார்.














