'வருஷநாடு பகுதி அரசு ஊழியர்கள் 118 பேர் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும்' - தேனி...
'வருஷநாடு பகுதி அரசு ஊழியர்கள் 118 பேர் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும்' - தேனி மாவட்ட ஆட்சியர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில், கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், நரியூத்து, முத்தலாம்பாறை, பொன்னம்படுகை, தங்கம்மாள்புரம், முருக்கோடை ஆகிய 9 ஊராட்சிகளுக்குட்பட்ட 98 மலைக் கிராமங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.
இலவம், கொட்டை முந்திரி, ஏலம் உள்ளிட்ட சாகுபடி செய்து பல தலைமுறைகளாக வசிக்கும் மேகமலை மலைக் கிராம மக்களை வன ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் என்ற பெயரில் வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசால் அதிகாரமளிக்கப்பட்ட குழு மற்றும் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தகவலின்படி மேகமலை வனக் கோட்டத்தில் உள்ள 5,072 ஹெக்டேர் வனத்தை 4,601 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் காவல், வனம், வருவாய், மின்சாரம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் 118 பேரும் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எந்தவித தயக்கமும் இன்றி வன நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை தமிழ்நாடு அரசு அகற்ற வேண்டும் எனவும், தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மேகமலை மலைக் கிராம மக்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும், 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, திமுக, அதிமுக, அமமுக, பாஜக, நாம் தமிழர் என அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதனை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மேகமலை மலைக் கிராம மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது அரசு சார்பில் விரைவில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் எனவும், மேகமலை மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து சட்டப்பேரவையில் மேகமலை விவகாரம் தொடர்பாக பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், 'உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் எனவும், மேகமலை மலைக் கிராம மக்கள் பக்கம் என்றும் தவெக அரசு இருக்கும்' எனக் கூறினார்.
இந்நிலையில் மேகமலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு மற்றும் தமிழ்நாடு அரசு அளித்த தகவலின்படி தெரிவிக்கப்பட்டுள்ள 118 அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வனத்தை விட்டு வெளியேறாவிட்டால், சம்மந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் உத்தரவிட்டிருப்பது மலைக் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வன விவசாயிகள் குடும்பத்தை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் 118 பேர், ராணுவம், மத்திய காவல் படை, காவல்துறை, முன்னாள் ராணுவம், வேளாண்மை, அங்கன்வாடி, சத்துணவு, கிராம நிர்வாக அலுவலர், சுகாதரத் துறை, தபால் துறை, நியாய விலைக்கடை, விடுதி காப்பாளர், மின்வாரியம், ஆசிரியர், ஊரக வளர்ச்சித்துறை, டாஸ்மாக், தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி துறை தலைமை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருப்பது மேகமலை மலைக் கிராம மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.














