"மோடி சொன்ன ஒரு வார்த்தை; Ironman இலக்கை நோக்கி என்னைத் திருப்பியது!" - அண்ணாமலை
TVK: லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி? ``இதுதான் ஊழல் ஒழிப்பு லட்சணம்" - சாடும் டிடிவி தினகரன்
செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சித் தலைவரும், த.வெ.க நிர்வாகியுமான வீராசாமி, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இது குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் தளப் பக்கத்தில், ``தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என ரீல்ஸ் கண்டெண்டுக்கு ஏற்றார் போல திரைப்பட வசனங்களை அடுக்கிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்போது? எப்படி ஒழிக்கப் போகிறார்?
ஏற்கனவே ஊழல் புகார்களுக்கு உள்ளாகி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க-வில் இருந்து விலகி, தவெகவில் வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட திரு.வீராசாமி அவர்கள், தற்போது ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், அவர் மீது ஏற்கனவே குவிந்திருக்கும் ஊழல் புகார்களையும், பொதுமக்கள் அவர் மீதி வைத்த குற்றச்சாட்டுகளையும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்குச் சொந்தமான கோயில் நிலம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது தவெக நிர்வாகி ஒருவர் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், தவெகவின் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவற்றின் லட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே, ஒப்பந்ததாரரிடம் தவெக நிர்வாகி லஞ்சம் வாங்குவது போல சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகளை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தி, லஞ்சம் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வரும் காலங்களில் ஊழல் ஒழிப்பைப் பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














