அதிமுக பொதுக்குழு: மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் குழம்பு - கம...
USA:``இந்த வழக்கில் தோற்றால் பேரழிவு'' - பிறப்பு குடியுரிமை குறித்து ட்ரம்ப் ஆவேசம்!
அமெரிக்கவில் 1860 காலகட்டத்தில் அடிமை முறைக்கு ஆதரவாகவும் - எதிராகவும் உள்நாட்டுப்போர் நடந்தது. இந்தப் போர் முடிவுக்கு வந்தபோது, அமெரிக்காவில் அடிமைகளாக இருந்தவர்களுக்கு சாதகமாக அமெரிக்காவில் பிறக்கும் குழந்தை அமெரிக்க சட்டப்படி அமெரிக்கராகவே கருதப்படும் எனச் சட்டமியற்றப்பட்டது.
அதன்படி, அமெரிக்க அரசியலைப்பின் 14-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 1868, ``அமெரிக்காவில் பிறந்த அல்லது குடியுரிமை பெற்ற மற்றும் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து நபர்களும் அமெரிக்கா மற்றும் அவர்கள் வசிக்கும் மாநிலத்தின் குடிமக்கள்." என வரையறுக்கிறது. அந்தச் சட்டம் நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் தொடர்கிறது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 2025-ல், சட்டவிரோத குடியேறிகள், சுற்றுலா விசா போன்ற தற்காலிகமாக அமெரிக்காவில் வசிப்பவர்கள் ஆகியோருக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாது.
இதற்கு முன் அத்தகைய குடியுரிமைப் பெற்றவர்களிடமிருந்து குடியுரிமை திரும்பப்பெறப்படாது. இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்கே இந்த சட்டம் செல்லும்' என அறிவித்தார். அதிபர் ட்ரம்பின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க செய்தி நிறுவனமான பொலிட்டிகோவிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ``இந்த வழக்கு மிகவும் சுவாரஸ்யமானது. இந்த சட்டம் அடிமைகளின் குழந்தைகளுக்காக இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் ஆண்டைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
அது உள்நாட்டுப் போருடன் தொடர்புடையது. வேறொரு நாட்டிலிருந்து சுற்றுலா விசாவில் வந்து, இங்கு குழந்தைப்பெறும் சில பணக்காரர்கள் நம் நாட்டில் கால் வைப்பதற்காக அந்தச் சட்டம் இல்லை. திடீரென்று பெரும் பணக்காரரின் முழு குடும்பமும் அமெரிக்க குடிமக்களாக மாறுகிறது.
அது எப்படி நடக்கிறது என இப்போது மக்கள் இந்தச் சட்டத்தைப் புரிந்துகொள்கிறார்கள். நீதிமன்றமும் அதைப் புரிந்துகொள்கிறது என்று நான் நினைக்கிறேன். அந்த வழக்கில் நாம் தோற்றால் அது ஒரு பேரழிவு தரும் முடிவாக இருக்கும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














