ஓராண்டிற்கு வங்கிக் கணக்கில் எவ்வளவு ரூபாயை பணமாகச் செலுத்தலாம்? - RBI சொல்வது எ...
VCK : `கேட்டது கிடைத்தது / இல்ல கிடைக்கவில்லை' - தொகுதி பங்கீட்டில் குழப்பும் திருமாவளவன் | பின்னணி
வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காதது சர்ச்சையான நிலையில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் தி.மு.க-விடம் சில தொகுதிகளை கேட்டோம். ஆனால் அவர்கள் தரவில்லை என தனது வருத்தங்களை பதிவுசெய்திருக்கிறார். அதுகுறித்து விரிவாக விசாரித்தோம்.

தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வி.சி.க ஏற்கனவே போட்டியிட்ட காட்டுமன்னார்கோயில், அரக்கோணம், செய்யூர், திருப்போரூர் ஆகிய தொகுதிகளை மீண்டும் ஒதுக்கப்பட்டது.
மேலும் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், பண்ருட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளும் தரப்பட்டன. கடந்த மார்ச் 27-ம் தேதி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது, நாங்கள் கேட்ட தொகுதிகளை எங்களுக்கு கொடுத்தார்கள்" எனப் பேட்டிக் கொடுத்தார்.
ஆனால், ஏப்ரல் 1-ம் தேதி முகநூல் நேரலையில் பேசும்போது, 'ராயபுரம் கேட்டோம்.. அது கிடைக்கவில்லை, பல்லாவரம் கேட்டோம் அதை தே.மு.தி.க-வுக்கு கொடுத்துவிட்டார்கள்.. வானூர் கேட்டோம்.. கள்ளக்குறிச்சியை தந்தார்கள்' என அதிருப்தி தெரிவித்திருக்கிறார். ஆக, தொகுதி பங்கீட்டில் திருமா அதிருப்தி அடைந்திருக்கிறார் என்ற பேச்சு மேலோங்கியிருக்கிறது.
ஏப்ரல் 1-ம் தேதி முகநூல் நேரலையில் பேசிய திருமா, "மீண்டும் நாகப்பட்டிணம் தொகுதியை தி.மு.க ஒதுக்கியிருந்தால் அவருக்கே கொடுத்திருப்பேன். அவர் சென்னையில் போட்டியிட வேண்டும் என விரும்பினார். ஆகவே ராயபுரம் தொகுதியை கேட்டேன். ஆனால் தி.மு.க அந்த தொகுதியை தர முன்வரவில்லை.

எனவே பல்லாவரம் தொகுதியை தாருங்கள் என தி.மு.க-வின் கேட்டோம். ஆனால் தே.மு.தி.க-வுக்கு கொடுத்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள். மேலும் தேர்தலுக்கு நாட்களும் குறைவாக இருப்பதால் தொகுதியை விரைந்து முடிக்க வேண்டிய சூழலும் இருந்தது. அதேபோல் வானூர் தொகுதியை கேட்டோம். அதை அவர்கள் தரமுடியாது என கள்ளக்குறிச்சியை கொடுத்தார்" என முகநூல் நேரலையில் தெரிவித்தார்.
நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், " இன்றைய விளக்கத்தின் மூலம் விருப்பமே இல்லாமல்தான் தொகுதி பங்கீட்டுக்கு திருமா ஒப்புக் கொண்டாரா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது, நாங்கள் கேட்ட தொகுதிகளை எங்களுக்கு கொடுத்தார்கள்" என அரைமனதுடன்தான் சொல்லியிருப்பார் என கருதவேண்டியுள்ளது" என்றனர்.
இவ்விவகாரம் குறித்து தி.மு.க தரப்பிலும் பேசினோம், "ராயபுரம் தொகுதியை தர மாட்டோம் என தி.மு.க தரப்பில் சொல்லவில்லை. அங்கே ஜெயக்குமார் இருக்கிறார், அங்கே எங்களால் போட்டியிட முடியாது என வி.சி.க-தான் மறுத்தது. அதேபோல திருப்போரூரை ஏற்கனவே பெற்றுக் கொண்ட வி.சி.க. இன்னொரு பொதுத் தொகுதியாக பண்ருட்டியைதான் விரும்பியது. ஆகவே வி.சி.க கேட்ட தொகுதிகளை நாங்கள் கொடுத்தோம். கள்ளக்குறிச்சியும் அவர்களின் விருப்ப பட்டியலில் இருந்த தொகுதிதான். வி.சி.க-வினரை ஆற்றுப்படுத்த திருமா அவ்வாறு சொல்லியிருக்கலாம்" என்கிறார்கள்.



















