அரிசி, மசாலா, மாம்பழத்திற்கு 'நோ' - இந்திய விவசாய ஏற்றுமதிகள் வெளிநாடுகளில் நிரா...
Venezuela Earthquakes: நிலநடுக்கத்தை போன் மூலம் முன்கூட்டியே அறியலாமா? கூகுள் தரும் தொழில்நுட்பம்!
ஜூன் 24, 2026 அன்று வெனிசுலாவில் 7.1 & 7.5 என்ற ரிக்டர் அளவுகோலில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அந்த நிலநடுக்க அதிர்வுகள் மக்களைத் தாக்குவதற்கு சில நொடிகள் முன்பாகவே, அங்குள்ள மக்களின் ஆண்ட்ராய்டு போன்களுக்கு கூகுள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை (Google Earthquake Alert) வந்தது.
பல கட்டடங்கள் இடிந்து விழுந்த இந்தக் கோர விபத்தில், தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க இந்தச் சில நொடிகள் மக்களுக்குப் பெரிதும் உதவியிருக்கின்றன.

பொதுவாக நிலநடுக்கம் எப்போது வரும், எங்கு வரும் என்பதைப் பல மணிநேரங்களுக்கு முன்பே கணிப்பது என்பது அறிவியலில் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், நிலநடுக்கம் தொடங்கிய புள்ளியில் (Epicenter) இருந்து ஆபத்தான அதிர்வுகள் மற்ற இடங்களுக்குப் பரவுவதற்குள், அதை நொடிப்பொழுதில் கண்டறிந்து உஷார்படுத்தும் தொழில்நுட்பத்தை கூகுள் சாத்தியப்படுத்தியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள 250 கோடி ஆண்ட்ராய்டு போன்களை இணைத்து, உலகின் மிகப்பெரிய பூகம்ப எச்சரிக்கை நெட்வொர்க்கை (Earthquake Alert Network) கூகுள் உருவாக்கியுள்ளது.
இது எப்படி வேலை செய்கிறது?
கூகுளின் இந்தத் தொழில்நுட்பம் மிகவும் எளிமையான, அதேசமயம் நுட்பமான அறிவியலை அடிப்படையாகக் கொண்டது.
* ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் 'ஆக்சிலரோமீட்டர்' (Accelerometer) என்ற சிறிய சென்சார் உள்ளது. நாம் போனை எந்தப் பக்கம் திருப்பினால் திரை அந்தப் பக்கம் திரும்புவது இதனால்தான். இந்தச் சென்சாரால் பூமியின் மிகச்சிறிய அதிர்வுகளையும் துல்லியமாக அளவிட முடியும்.
* நிலநடுக்கம் ஏற்படும்போது பூமியிலிருந்து இரண்டு வகையான அலைகள் உருவாகும்.
P-waves (Primary waves): இவை மிக வேகமாகப் பயணிக்கும். ஆனால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
S-waves (Secondary waves): இவை P-waves-ஐ விட மெதுவாகப் பயணிக்கும். ஆனால் கட்டடங்களை இடிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை, ஆபத்தானவை.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பல ஆண்ட்ராய்டு போன்களின் சென்சார்கள் இந்த ஆபத்தில்லாத P-waves அதிர்வுகளை ஒரே நேரத்தில் உணர்ந்தால், உடனே அந்தத் தகவல் இணையத்தின் மூலம் ஒளியின் வேகத்தில் கூகுள் சர்வருக்குச் செல்லும்.
சர்வருக்கு தகவல் கிடைத்த மறுகணமே, S-waves எனப்படும் ஆபத்தான அதிர்வுகள் அந்தப் பகுதியை வந்தடைவதற்கு முன்பாகவே, ஆபத்து வளையத்தில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கும் சைரன் ஒலியுடன் கூகுள் எச்சரிக்கை அனுப்பிவிடும்.
அதாவது, நிலநடுக்க அலைகள் பூமியைக் கடந்து வரும் வேகத்தை விட, இணையத்தின் வேகம் மிக அதிகம் என்பதே இந்தத் தொழில்நுட்ப வெற்றியின் ரகசியம்!
இது நிலநடுக்கம் வரப்போவதைக் கணிக்காது (Prediction). மாறாக, நிலநடுக்கம் ஓரிடத்தில் தொடங்கிய மறுகணமே அதைக் கண்டறிந்து (Detection), அதிர்வுகள் நெருங்குவதற்கு முன் எச்சரிக்கிறது. நிலநடுக்கம் உருவான மையப்பகுதியில் இருந்து நாம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பதைப் பொருத்து நமக்கு சில நொடிகள் முதல் ஒரு நிமிடம் வரையிலான கால அவகாசம் கிடைக்கும்.
நிலநடுக்கத்தின் போது `Drop, Cover, and Hold On’ (கீழே விழு, மேசையின் அடியில் மூடிக்கொள், பிடித்துக்கொள்) என்ற பாதுகாப்பு நிலைக்குச் செல்ல இந்தச் சில நொடிகள் போதுமானது என்று பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கூகுள் அலெர்ட் சாதனைகள்
வெனிசுலா மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் கூகுளின் இந்தத் தொழில்நுட்பம் பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளது:
* நவம்பர் 2023-ல் பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின்போது, நிலநடுக்கம் தொடங்கிய வெறும் 18.3 வினாடிகளில் கூகுள் எச்சரிக்கை அனுப்பியது. இதனால் சுமார் 25 லட்சம் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். அதே மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சுமார் 1 கோடிப் பேருக்கு 10 முதல் 60 வினாடிகளுக்கு முன்பாகவே எச்சரிக்கை சென்றது.
* கலிபோர்னியா போன்ற மாகாணங்களில் இது அதிகாரப்பூர்வ நிலநடுக்க சென்சார்களுடன் இணைந்து செயல்படுகிறது. பலமுறை நிலநடுக்கம் வருவதற்கு முன்பே ரயில்களை நிறுத்தவும், முக்கிய இயந்திரங்களை அணைக்கவும் இந்த அலர்ட் பயன்பட்டுள்ளது.
2021-ல் நியூசிலாந்து மற்றும் கிரீஸில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது 98 நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது. இதுவரை 4.5 ரிக்டருக்கும் அதிகமான 2000-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களில் சுமார் 79 கோடி அலெர்ட்டுகளை உலகெங்கிலும் கூகுள் அனுப்பியுள்ளது.
உங்கள் போனில் செட் செய்ய
Settings -> Safety & emergency -> Earthquake alerts On
இந்தச் சேவை சரியாகச் செயல்பட, போனின் Location (GPS), இணைய இணைப்பு (Data) எப்போதும் ஆன் நிலையில் இருப்பது அவசியம்.

ஒரு காலத்தில், நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பிரத்யேக கருவிகளை கடலுக்கடியிலும், நிலத்திலும் நிறுவ வேண்டியிருந்தது. ஆனால் இன்று, உலக மக்கள் ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் இருக்கும் ஒரு சாதாரண செல்போனையே, மக்களின் உயிரைக் காக்கும் ஒரு கருவியாக மாற்றியிருக்கிறது கூகுள்.
எந்த ஒரு விலையுயர்ந்த தனி உபகரணமும் இல்லாமல், மக்களிடம் உள்ள போன்களை கொண்டே உலகின் மாபெரும் பாதுகாப்பு வலையை உருவாக்கியிருப்பது மனித குல வரலாற்றில் தொழில்நுட்பத்தின் மிகச்சிறந்த பயன்பாடுகளில் ஒன்றாகும்.




















