மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்...
'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்
தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார்.
பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுகிறது. ரஷ்ய எண்ணெய் வாங்குவதில் மிக ஆர்வமாக இருக்கிறதே' என்கிற கேள்வியைக் கேட்டார்.
இதற்கு ஜெய்சங்கர், "முதலில் எல்லாரும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
உலகச் சந்தையில் எண்ணெயின் விலையை நிலைப்படுத்துவதற்காக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குமாறு இந்தியாவை முதலில் கேட்டுக்கொண்டதே அமெரிக்கா தான்.

ஆனால் கடந்த ஆண்டு பார்த்தீர்கள் என்றால், நாங்கள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக எங்கள் மீது தடைகளை விதித்தார்கள்.
இப்போது மறுபடியும் உலகச் சந்தையில் எண்ணெயின் விலை குறைய வேண்டும் என்பதற்காக, ரஷ்யா மீதான தடையை அவர்களே மீண்டும் நீக்கியிருக்கிறார்கள்.
அதனால், இதில் ஏதோ பெரிய உலகளாவிய கொள்கையோ, நெறிமுறையோ இருப்பதாக யாரும் இங்கே நடிக்க வேண்டாம்.
தங்களுக்குத் தேவைப்படும்போது தடையை நீக்குவதும், தேவை இல்லாதபோது தடையை விதிப்பதும் என்ன நியாயம்?
நாம் அனைவரும் முதிர்ந்த மனிதர்கள். உலக அரசியலின் ஆட்டம் என்னவென்று நமக்கு நன்றாகவே தெரியும். அதனால், இந்த விஷயத்தில் யாரும் எங்களுக்குப் புத்திமதி சொல்லத் தேவையில்லை.
இந்திய ஆயுதங்களைக் கொண்டு எந்தவொரு ஐரோப்பிய நாடும் இதுவரை தாக்கப்படவில்லை. ஆனால், ஐரோப்பாவைப் பற்றி எங்களால் அப்படிப் பெருமையாகச் சொல்ல முடியாது.
ஐரோப்பா விற்கும் ஆயுதங்கள் தான் இந்தியாவைத் தாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது இன்றோ நேற்றோ நடப்பதல்ல. பல ஆண்டுகளாக நடக்கிறது.

இந்தியர்களாகிய நாம் என்றுமே ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இது மிகவும் நியாயமான ஒரு வாதம் தானே?
விலை குறைவாகக் கிடைப்பதையும், தட்டுப்பாடின்றி கிடைப்பதையும் அடிப்படையாகக் கொண்டுதான் நாங்கள் எண்ணெய் வாங்குகிறோம்.
அந்தச் சமயத்தில் சந்தையில் கிடைத்த பெரும்பாலான எண்ணெய் ரஷ்யாவினுடையது தான்.
ஏனென்றால், ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெயை ஒட்டுமொத்தமாக வாங்கிக் குவித்தன.
அதுதான் எங்களுடைய பாரம்பரிய எண்ணெய் விநியோகச் சந்தையாக இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், அப்போது ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலைதான் எங்களை ரஷ்யா நோக்கித் தள்ளியது" என்று பதிலளித்துள்ளார்.
















