"நாம் செய்த இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கால் எதிர்கட்சிகள் நிலைகுலைந்துபோயுள்ளனர்!" ...
`அரசுப் பள்ளி மாணவர்களின் 50 நூல்கள்' இறையன்பு ஐ.ஏ.எஸ் வழிகாட்டுதலில் சாதித்த கண்ணகி நகர்!
சென்னைக்குள் இருந்து வேர்பிடுங்கி எறியப்பட்ட அடித்தட்டு மக்களின் புகலிடமாக இருக்கிறது கண்ணகி நகர். இந்தப் பகுதியில் 1,20,000 பேர் வசிக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கல்வி, விளையாட்டு, என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது தமிழக அரசு.
கண்ணகி நகரில் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த ‘முதல் தலைமுறை அறக்கட்டளை‘ என்கிற அறக்கட்டளை தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகளும் தற்காப்புப் பயிற்சிகளும், இளைஞர்களுக்குத் தொழிற்திறன் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக இப்போது கண்ணகி நகரில் நானூறுக்கும் மேற்பட்ட முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகியிருக்கிறார்கள். பலர் வேலைவாய்ப்புகளையும் பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் ‘எழுதுக‘ என்கின்ற ஓர் அமைப்பின் மூலம் நூல்களை எழுதுவதற்கு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, புத்தகங்களை எழுதி வெளியிடும் மகத்தான முயற்சி நடந்து வருகிறது. இந்த அமைப்பு, கண்ணகி நகரில் உள்ள மாணவர்களுடைய படைப்பாக்கத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு கோடை விடுமுறை முதல் பலருக்கும் பயிற்சி அளிக்க முன்னெடுப்புகளை எடுக்கத் தொடங்கியது. வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் கண்ணகி நகருக்கு வந்து அங்கிருக்கும் முதல் தலைமுறை அறக்கட்டளை கட்டடத்தில் பயிற்சியை அளித்து வந்தனர்.
இதன் விளைவாக கண்ணகி நகரைச் சேர்ந்த 50 மாணவர்கள் எழுதிய நூல்கள் செம்மைபடுத்தப்பட்டு, 'நியூ செஞ்சுரி பதிப்பகம்' மூலம் புத்தங்களாக அச்சிடப்பட்டன. இன்று அந்த 50 புத்தகங்களும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கண்ணகி நகரின் மாணவர்கள் முன்பு வெளியிடப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு எழுதுக அமைப்பைச் சார்ந்த கிள்ளிவளவன் வரவேற்புரையும், ஜோசப் ராஜா நோக்க உரையும், பாலச்சந்திரன் வரவேற்புரையும் ஆற்றினர்.

கண்ணகி நகர் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஆனந்தீஸ்வரி, மாணவர்கள் எழுதத் தொடங்கிய பிறகு அவர்கள் பண்பிலும் நடத்தையிலும் ஏற்பட்டிருக்கின்ற மாறுதல்களையும், தாக்கத்தையும் பற்றிப் பேசினார்.
நியூ செஞ்சுரி பதிப்பக மேலாண் இயக்குநர் திரு சந்தானம் பேசுகையில், "இந்த மாணவர்கள் தொடர்ந்து நூல்களை எழுதி எங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவார்கள்" என்கின்ற நம்பிக்கையையும் தெரிவித்து மாணவர்களைப் பாராட்டினார்.
‘எழுதுக‘ அமைப்பின் வழிகாட்டியாக இருந்து அமைப்பை நெறிபடுத்தி வருகிற முனைவர் இறையன்பு ஐ.ஏ.ஏஸ் பேசுகையில், "நூல்களை எழுதுபவர்கள் மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். வாசிப்பை மேலும் தீவிரமாக்குவார்கள். கண்ணகி நகரின் மாணவர்கள் பல்வேறுவிதமான சூழல்களில் தங்களுடைய அனுபவங்களைப் பெறுகிறார்கள். அவர்கள் ஒன்றும் பாதுகாக்கப்பட்ட மாணவர்கள் அல்லர். பல இடர்பாடுகளைச் சந்தித்து வளர்கின்ற மாணவர்கள். அதன் காரணமாகச் செறிவான அனுபவங்கள் அவர்களிடம் குவிந்து கிடக்கின்றன. அவற்றை எழுதுகிறபோது இதுபோன்ற பகுதிகளில் வாழ்கின்றவர்கள் எத்தகைய சூழலில் வாழ்கிறார்கள் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள முடியகிறது.

இந்தியாவிலேயே இப்படி ஒரே ஒரு பகுதியில் 50 நூல்களை மாணவர்கள் எழுதி வெளியிடுவதும் அதை ஒரு தேர்ந்த பதிப்பகம் வெளியிடுவதும் மிகுந்த சிறப்பு. இந்த நிகழ்ச்சியின் மூலமாக கண்ணகி நகரின் மாணவர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். மேலும் இதுபோன்ற முயற்சி தமிழ்நாடு எங்கும் நிகழும்" என்று நெகிழ்ச்சிப் பொங்க தெரிவித்தார்.
இறுதியாக மாணவர்கள் எழுதிய ஐம்பது நூல்களும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டபோது மாணவர்கள் தாங்கள் படைப்பாளிகளாகப் பரிணாம வளர்ச்சி அடைந்த மகிழ்ச்சியில் உற்சாகமடைந்தார்கள்.



















