எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த 2 அதிமுக எம்.எல்.ஏ.க்க...
அருள்வான்: "அருள்நிதி ஒரு படத்தில் நடிக்க சாதாரணமாக ஒப்புக்கொள்ள மாட்டார்" - காளி வெங்கட்
இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், விடிவி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, சரவணன், உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படம் ஜுலை 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூலை.6) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய காளி வெங்கட், "இந்தப் படத்தில் நடித்தது மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மனிதர்களும், மிருகங்களும் நடமாடும் கடினமான மலைப் பகுதியில்தான் படப்பிடிப்பு நடைபெற்றது.
மலைப்பகுதியில் முட்புதர்களாக இருக்கும் இடத்தில் ஒளிப்பதிவாளர் சுகுமார் பின்னோக்கி ஓடிக் கொண்டிருப்பார். நாங்கள் அவரைப் பின்தொடர்ந்து செல்வதே சவாலானதாகத்தான் இருந்தது. இப்படி ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதே சவாலானதாக இருந்தது.
ஒரு நாள் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு செல்வதற்கு எந்த வசதியும் இல்லை. நடந்துதான் செல்ல வேண்டும். ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கான 'டென்ட்'டை அவர்களே தூக்கிக் கொண்டு சென்று, அங்கு டென்ட் அடித்து தங்க வேண்டும்.
படப்பிடிப்புத் தளத்திற்கு உள்ளூர் வழிகாட்டி ஒருவர் வேகமாக மலைப்பகுதியில் இறங்கி நடந்து சென்றார். அவரைப் பின்தொடர்வது கடினமானதாக இருந்தது. செங்குத்தான மலைப்பாதையில் நடந்து செல்லும் போது 'திக் திக் 'என்று இருந்தது.

இந்தப் படத்தில் சின்ன வேடத்தில் நடித்த எனக்கே அவ்வளவு சவால்கள் இருந்தது என்றால் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும். அனைவருக்கும் இது கடினமான - மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் இப்படத்தின் காட்சிகளை இயக்குநர் எனக்கு காண்பித்தபோது மிகவும் உற்சாகமாக இருந்தது.
அடிப்படைக் கல்வியைப் பற்றி பேசும் ஒரு படம் இது. இந்தப் படம் வெளியான பிறகு நிச்சயமாகப் பேசப்படும். நடிகர் அருள்நிதி ஒரு படத்தில் சாதாரணமாக நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார். அவருடைய கதை தேர்வு பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்றால், இந்தப் படம் மிக நன்றாக இருக்கும். இப்படத்தில் உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.















