மத்தியப் பிரதேசம்: "வக்பு வாரியத்தில் 2 இந்து உறுப்பினர்கள் நியமனம்" - முதல்வர் ...
Run Rerelease: "முதல்ல வேற ஹீரோயின் வச்சுதான் 4 நாள் ஷூட் பண்ணினேன்" - பகிரும் லிங்குசாமி
இயக்குநர் லிங்குசாமியின் 'அஞ்சான்' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு ரீ-ரிலீஸ் ஆகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அவருடைய 'ரன்' படத்தையும் ரீரிலீஸுக்குத் தயார் செய்திருக்கிறார்.
மாதவன், மீரா ஜாஸ்மின் எனப் பலரும் நடித்திருந்த இப்படம் 2002-ல் வெளியாகி, பெரிய அளவில் ஹிட் அடித்தது. மாதவனை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியதும் இப்படம்தான். ரீரிலீஸையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.

அவர் பேசுகையில், "நாம் எல்லா படங்களையும் திட்டமிட்டுத்தான் எடுக்கிறோம். ஆனால், சில படங்களுக்கு மட்டும்தான் நாம் நினைத்த மாத்திரத்தில் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் கச்சிதமாக அமைந்துவிடுவார்கள்.
அப்படி அமைந்ததுதான் 'ரன்' திரைப்படம். நான் எங்கு சென்றாலும் பலரும் என்னிடம், 'ரன் மாதிரி ஒரு படம் மறுபடி பண்ணுங்க சார்', அல்லது 'ரன் படத்தை ரீரிலீஸ் பண்ணுங்க' என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். நிஜமாகவே இந்தப் படத்தை ரீரிலீஸ் செய்யும் எண்ணம் எனக்கு முதலில் இல்லை.
சமீபகாலமாக ரீரிலீஸ் படங்களில் எது ஓடும், எது ஓடாது என்ற கணக்கு எனக்கே புரியவில்லை. 'கில்லி', 'படையப்பா' படங்கள் மிகப்பெரிய ஹிட்டாகின்றன. 'கில்லி' ஓடியதால் 'குஷி' ஓடும் என்று எதிர்பார்த்தால், அது பெரிய அளவில் போகவில்லை.
தியேட்டரில் ரிலீஸான போது பெரிதாகப் போகாத 'சச்சின்' படம், இப்போது ரீ-ரிலீஸில் மாஸ் ஹிட்டாகிறது. இதனுடைய பிசினஸ் கணக்கு எனக்கே தெரியாததால், நானும் உங்களைப் போல ஒரு ஆடியன்ஸாகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

'ரன்' ரீரிலீஸானால் தியேட்டருக்குப் போய் பார்ப்பேன் என்று ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கிறது. அன்று தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் சார் எந்தவொரு காம்ப்ரமைஸும் இல்லாமல் மாதவன், மீரா ஜாஸ்மின் எனப் பெரிய கூட்டணியை அமைத்துக் கொடுத்தார்.
தெலுங்கு நடிகர் பிரபாஸை நான் சந்தித்த போது கூட, 'ரன் படத்தை 8, 10 முறை பார்த்திருக்கிறேன், அதை எங்கு ஷூட் செய்தீர்கள்?' என்று வியந்து கேட்டார். ஒரு இயக்குநருக்கு எப்போதும் இரண்டாவது படம் ரொம்ப முக்கியம்.
முதல் படம் குடும்பப் படமாக இருந்ததால், 'இவர் குடும்பப் படம் மட்டும்தான் எடுப்பார்' என்று முத்திரை குத்திவிடக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இந்த கமர்சியல் ஆக்ஷன் ஸ்கிரிப்ட்டை எழுதினேன். இந்தக் கதை முழுக்க முழுக்க மாதவனுக்காகவே எழுதப்பட்டது. ரத்னம் சாரிடம் சொன்ன உடனே அவருக்கும் பிடித்து மேடியை கமிட் செய்தார்" என்றார்.
"முதலில் மீரா ஜாஸ்மின் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. வேறொரு கதாநாயகியை வைத்து நான்கு நாட்கள் ஷூட் செய்தோம். அவருக்கு தமிழ் தெரியாது, இந்தி, ஆங்கிலம் மட்டும்தான் தெரியும்.
மொழிப் பிரச்னை மட்டுமில்லாமல், நான் நினைத்த நடிப்பை அவரிடம் இருந்து வாங்க முடியவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு எனக்குப் பயம் வந்து ஷூட்டிங்கையே நிறுத்திவிட்டேன்.
பிறகு ரத்னம் சாரிடம் பேசி, கதாநாயகியை மாற்ற முடிவு செய்தோம். அப்போது ஆனந்த விகடன் அட்டைப் படத்தில் மீரா ஜாஸ்மினின் புகைப்படத்தைப் பார்த்திருந்தேன்.

உண்மையில் 'பாய்ஸ்' படத்திற்காக இயக்குநர் ஷங்கர் சார் தேர்வு செய்து வைத்திருந்த 20, 30 ஹீரோயின்களில் இவரும் ஒருவர். 'பாய்ஸ்' படத்தில் ஜெனிலியா கமிட் ஆன பிறகு, மீரா ஜாஸ்மினை வரவழைத்துப் பேசினோம்.
அப்போது அவருக்கு தமிழ் தெரியாததால், நான் தமிழில் சொல்ல என் உதவி இயக்குநர் ஆங்கிலத்தில் கதை சொன்னார். என் கதையை ஆங்கிலத்தில் கேட்கும்போது எனக்கே அது புதுசாக இருந்தது" என்றார்.




















