Run Rerelease: "முதல்ல வேற ஹீரோயின் வச்சுதான் 4 நாள் ஷூட் பண்ணினேன்" - பகிரும் ல...
”விஜய், உதயநிதியைச் சமாளிக்க டி.டி.வி.தினகரனைச் சேர்க்க வேண்டும்” - அதிமுக நிர்வாகி ஆலோசனை
சட்டமன்றத் தேர்தல் தோல்வி, அதிமுக எம்.எல்.ஏக்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் ஐக்கியமாகி வரும் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டம் வாரியாக நிர்வாகிகளிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடந்து வருகிறது.

இன்று தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவர், 'தலைமையகத்தில் புகார் பெட்டி ஒன்றை வைக்க வேண்டும். நிர்வாகிகள் பற்றிய புகார்களை அதில் கட்சியினர் போடுவார்கள். புகார் பெட்டிக்கு வரும் புகார்களை நீங்களே படித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியில்லாத நிர்வாகிகள் குறித்து அறிந்து நடவடிக்கை எடுக்கலாம். இது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது என பேசியதாகச் சொல்கிறார்கள்.
இதே போல் கும்பகோணம் மாநகரத்தின் பகுதி கழகச் செயலாளர் பத்ம.குமரேசன் கும்பகோணம் மாநகராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார். இவர் அதிமுக வலுவடைவதற்கு கட்சியில் டி.டி.வி.தினகரனைச் சேர்க்க வேண்டும் என்றுள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமி, தனியாக கட்சி நடத்தி அதன் பொதுச்செயலாளராக இருப்பவரை நாம் சேர்க்க வேண்டும் என இந்த நேரத்தில் பேச வேண்டாம்.
இப்போதைய சூழலுக்கு இது சரி வராது. இந்தச் செய்தி வெளியே போய்விடும் என்று மடைமாற்றியுள்ளார். இது அரசியல் வட்டத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இது குறித்து பத்ம.குமரேசனிடம் பேசினோம், ''கட்சி வளர்ச்சி பெற இளைஞர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். இதே போல் டி.டி.வி.தினகரனை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்றேன். இதை கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் மக்கள் உள்ளிட்ட அனைவரும் விரும்புகின்றனர்.
அதையே நானும் சொல்கிறேன். அதிமுக வலுவடைய வேண்டும் என்றால் தினகரனைச் சேர்க்க வேண்டும் என்று பேசினேன். தற்போதுள்ள சூழலுக்கு அரசியல் ரீதியான நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் கவுண்டர் கொடுக்க வேண்டும். அதற்கு சரியான நபர் டி.டி.வி.தினகரன். விஜய், உதயநிதி போன்றவர்களைச் சமாளிக்கவும், கட்சி வளர்ச்சி பெற்று பழையபடி வலுவாக மாறவும் தினகரன் அவசியம் வேண்டும்'' என்றார்.















