`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை ...
`ஆச்சி’ மனோரமா: அண்ணா முதல் விஜய் வரை - 6 முதல்வர்களுடன் நடித்த ஒரே சாதனை நாயகி!
இந்தியத் திரையுலகில் ஈடு இணையற்ற குணச்சித்திர, நகைச்சுவை நடிகையாக விளங்கியவர் ‘ஆச்சி’ மனோரமா. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமை பெற்றவர். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் சினிமாவில் இவர் நடிக்காத கேரக்டேரே கிடையாது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1937, மே 26-ம் தேதி பிறந்தார். இயற்பெயர் கோவிந்தம்மாள். குடும்பத்தில் வறுமை சூழல். இதனால் காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு வந்து சேர்ந்தது மனோரமா குடும்பம். `யார் மகன்' என்ற நாடகத்தில் மனோரமா நடிக்கும்போது அவரது வயது 12. நாடகங்களில் நடித்து, 1958ல் `மாலையிட்ட மங்கை' படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார்.
தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என்.டி.ராமாராவுடன் தெலுங்கு படங்களில் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார். இந்த வரலாற்றுச் சாதனைப் பட்டியலில் தற்போது இணையவுள்ள பெயர் விஜய்.
1. அண்ணா
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை நாடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் பேரறிஞர் அண்ணா. நாடகத் துறையில் மனோரமா நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில், அண்ணாவின் பல புகழ்பெற்ற நாடகங்களில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அண்ணா எழுதி, இயக்கி, நடித்த ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’, ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாடகங்களில் மனோரமா அவருடன் இணைந்து மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
2. கருணாநிதி
நாடகத் துறையில் மனோரமாவின் திறமையைக் கண்ட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், மு.கருணாநிதி எழுதிய ‘மணிமகுடம்’ நாடகத்தில் நடிப்பதற்காக அவரை சென்னைக்கு அழைத்து வந்தார். மேலும், கலைஞர் கருணாநிதி எழுதிய ‘உதயசூரியன்’ என்ற நாடகத்தில் கலைஞரே கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடித்த பெருமையும் மனோரமாவையே சேரும்.

3. எம்.ஜி.ஆர்
நாடக மேடைகளில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த மனோரமா, எம்.ஜி.ஆருடன் பல வெற்றித் திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். ‘அன்பே வா’, ‘படகோட்டி’ போன்ற பல படங்களில் எம்.ஜி.ஆரின் நடிப்புக்கு ஈடுகொடுத்து நகைச்சுவையில் கலக்கியிருப்பார்.
4. ஜெயலலிதா
ஜெயலலிதாவுடன் பல திரைப்படங்களில் மனோரமா இணைந்து நடித்துள்ளார். ‘கந்தன் கருணை’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘பட்டிக்காடா பட்டணமா’ போன்ற திரைப்படங்களில் இவர்களின் நடிப்பு தனித்து நின்றது. இருவருக்கும் இடையே திரையைத் தாண்டி நிஜ வாழ்விலும் அக்கா - தங்கை போன்ற மிக நெருக்கமான பிணைப்பு இருந்தது.
5. என்.டி. ராமாராவ் (NTR)
தமிழ் மட்டுமன்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தடம் பதித்த மனோரமா, தெலுங்குத் திரையுலகின் ஜாம்பவானும், பின்னர் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகவும் உயர்ந்த டாக்டர் என்.டி. ராமாராவ் அவர்களுடனும் தெலுங்குத் திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
6. விஜய்
‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக உருவெடுத்துள்ள விஜய்யுடனும் மனோரமா ‘செந்தூரப் பாண்டி’, ‘ரசிகன்’, ‘தேவா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

ஒரு சாதாரண மேடை நாடகக் கலைஞராகத் தன் பயணத்தைத் தொடங்கி, நாட்டின் மிக உயரிய பதவியில் அமர்ந்த பல ஆளுமைகளுடன் சரிசமமாகத் திரையிலும் மேடையிலும் நின்ற மனோரமா ஆச்சியின் வாழ்க்கை ஒரு வரலாற்றுப் பாடம்.
ஆறு முதலமைச்சர்களுடன் அவர் நடித்தார் என்பது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல; அது அவருடைய காலத்தை வென்ற திறமைக்கும், மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் பண்பிற்கும் சான்றாகும். அண்ணாவின் அடுக்குமொழி வசனம் முதல் இன்றைய விஜய்யின் வேகம் வரை அனைத்திற்கும் சமமாக நடித்த ஒரே கலைஞர் அவராகத்தான் இருக்க முடியும்.
திரைத்துறையில் எத்தனையோ சாதனைகள் இனி நிகழலாம், ஆனால் ஆறு முதலமைச்சர்களுடன் திரையைப் பகிர்ந்த இந்த அபூர்வ சாதனையை எவராலும் அவ்வளவு எளிதில் முறியடிக்க முடியாது.
















