ஊட்டி: எல்-நினோ தாக்கம்; தரை தட்டிய அணைக்கட்டுகள் - தண்ணீருக்காக தவிக்கும் மக்கள...
ஊட்டி: எல்-நினோ தாக்கம்; தரை தட்டிய அணைக்கட்டுகள் - தண்ணீருக்காக தவிக்கும் மக்கள்!
எல்- நினோ தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை பொய்த்திருக்கிறது. சமவெளிப் பகுதிகளுக்கு இணையாக நீலகிரியின் பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அணைகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் எமரால்டு, பார்சன்ஸ் வேலி, குன்னூர் ரேலியா உள்ளிட்ட அணை பல அணைகளிலும் நீர்மட்டம் தரை தட்டி வருகிறது.
பருவமழை உச்சத்தில் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதேவேளையில் வேளாண்மை, மின் உற்பத்தி, வனவிலங்குகளுக்கான தண்ணீர் தேவையிலும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் நிலைமை இன்னும் மோசமாக மாறும் என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வறட்சி குறித்து குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், " கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு தலைத் தூக்கியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்களின் ஒரே குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ரேலியா அணை வறண்டு கிடக்கிறது. இப்போதே லாரிகளில் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மழையில்லாமல் இப்படியே நீடித்தால் நிலைமையை எப்படி சமாளிப்போம் என்று தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு மாற்று நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றனர்.














