TNPL 2026 : மதுரையை அசால்டாக வென்ற திருப்பூர்; நெல்லையின் அட்டகாச பந்துவீச்சு; ச...
IIT Madras: ``ஐஐடி மெட்ராஸில் மருத்துவக் கல்வி" - இயக்குநர் காமகோடி சொல்லும் திட்டம்!
புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி மெட்ராஸ் (IIT Madras), மருத்துக் கல்வியை தொடங்கவிருப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ``ஐஐடி மெட்ராஸ் மருத்துவப் பட்டங்களை வழங்கும் புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. இது நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. மே 2023-ல் 'மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை' தொடங்கப்பட்டதன் மூலம் இதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் பொறியியல் மற்றும் உயிரியல் ஆகிய இரண்டிலும் திறன்பெற்ற 'கலப்புத் திறன் கொண்ட' மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநர்களையும், மருத்துவர்-விஞ்ஞானிகளையும் உருவாக்குவதே முதன்மை இலக்காகும்.

நவீன மருத்துவம் முழுமையாகத் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பதால், அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் மருத்துவப் பள்ளிகளைத் தொடங்க வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவில் உயர்தர மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படும் சூழலில், வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதில் உள்ள ஆபத்தை கோவிட்-19 காலம் உணர்த்தியது. உள்நாட்டிலேயே மருத்துவக் கருவிகள் மற்றும் மென்பொருட்களை உருவாக்கவும், மருத்துவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் இடையிலான சிந்தனை இடைவெளியைக் குறைக்கவும் இரு தரப்பினரும் ஒரே இடத்தில் பயிற்சி பெறுவது மிக முக்கியமாகும்.
இந்தியாவில் மருத்துவக் கல்வியை 'தேசிய மருத்துவ ஆணையம்' (NMC) நிர்வகிப்பதால், மருத்துவப் பட்டங்களை வழங்குவது எளிதான காரியம் அல்ல. யார் மருத்துவக் கல்லூரியை நடத்தலாம் மற்றும் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பட்டங்களை வழங்கலாம் என்பதை இந்த ஆணையமே முடிவு செய்கிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்த விரும்புபவர்கள் ஆணையத்தின் ஒப்புதலைப் பெறுவதோடு, மாணவர்கள் நேரடிச் சிகிச்சை பயிற்சி பெற சொந்தமாக இயங்கும் 'கற்பித்தல் மருத்துவமனை' (teaching hospital) ஒன்றையும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

மருத்துவக் கல்வியை ஒருங்கிணைக்க ஐஐடி கரக்பூர் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. அது எம்.டி (MD) படிப்பிற்கு ஒப்புதல் பெற்றிருந்தாலும், உள்கட்டமைப்புச் சிக்கல்களால் அதன் எம்.பி.பி.எஸ் திட்டம் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. ஐஐடி மெட்ராஸ் முன்னணி மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தாலும், விதிமுறைகளின்படி முதலில் சொந்தமாக மருத்துவமனையை அமைத்து, அதன் பிறகே தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற சவாலான வழிமுறையைப் பின்பற்ற வேண்டியுள்ளது." என்றார்.



















