'ஆயிரம் கோடிக்கணக்கில் இந்தியாவில் இருந்து வெளியேறும் பணம்' இந்திய ரூபாய் மதிப்ப...
'எடப்பாடிக்கு எதிராகவே `அதிமுக அதிகாரப்பூர்வ' ஊடகங்கள் திரும்பியது எப்படி?
அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடும், தொலைக்காட்சியும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பியதோடு த.வெ.க ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு துணை நிற்கின்றன. அ.தி.மு.க வட்டாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் இவ்விவகாரங்கள் குறித்து விசாரித்தோம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வென்றது அ.தி.மு.க. 'ஆட்சியை பிடிப்போம்' என்ற கனவில் தேர்தல் சந்தித்த அக்கட்சியினருக்கு இந்த முடிவுகள் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன.
வெறும் 47 எம்.எல்.ஏ-க்களை பெற்றாலும் தி.மு.க ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வாராவார் என்ற பேச்சும் அடிபட்டது. ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம், வேலுமணி, சி விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் 25 எம்.எல்.ஏ-க்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் சாய்ந்திருக்கின்றன.
சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அந்த 25 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்தது எடப்பாடி தரப்பை உஷ்ணமாக்கிவிட்டது. அதோடு, கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக திரும்பியது மட்டுமில்லாமல் அதிகாரப்பூர்வ நாளேடு, ஊடகங்களும் எடப்பாடிக்கு எதிராக திரும்பிவிட்டன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், "எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் சசிகலா, தினகரன் ஆகியோரை ஓரம்கட்டினார். அப்போது அவர்கள் பிடியிலிருந்து ஜெயா டிவியும், நமது எம்.ஜி.ஆர் நாளேடும் எடப்பாடிக்கு எதிரான கம்பு சுற்றின. அதன்பிறகே 'நியூஸ் ஜெ', நமது அம்மா ஊடகங்கள் தொடங்கப்பட்டன. தற்போது அவை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. '
ஜெயா டிவியும் நமது எம்.ஜி.ஆரும்' நம்மைவிட்டு போனதுபோல அடுத்துவரும் ஊடகங்கள் கையைவிட்டுப் போய்விடக் கூடாது என கட்சி நிதியில் ஊடகங்கள் தொடங்குவோம் என கருதினார் எடப்பாடி.
ஆனால் அது நடக்கவில்லை. மாறாக சி.வி சண்முகத்தின் அண்ணன் சி.வி ராதாகிருஷ்ணன் தனது பொறுப்பில் 'நியூஸ் ஜெ' ஊடகத்தை தொடங்கினார். வேலுமணிக்கு நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர் 'நமது அம்மா' நாளேட்டை தொடங்கினார்.
இப்போது சி.வி சண்முகமும், வேலுமணியும் எடப்பாடிக்கு எதிராக திரும்பிவிட்ட நிலையில் அந்தந்த ஊடகங்களுக்கு சி.வி சண்முகம், வேலுமணிக்கு ஆதரவாக இருக்கின்றன. கட்சியின் நிதியில் எடப்பாடி பழனிசாமி ஊடகங்கள் தொடங்க அன்றே முடிவெடுத்திருந்தால் இந்த சிக்கல்களை அவர் தடுத்திருக்கலாம்" என்றனர்.
அ.தி.மு.க-வில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?!

















