'இந்தியா என்னை 100% நம்பலாம்; நான் மோடியின் மிகப்பெரிய ஃபேன்!' - சர்ப்ரைஸ் போன்க...
"என்கிட்ட காட்டாமலே எரிச்சுட்டாங்க" – கோவை சிறுமியின் தாய் பரபரப்பு புகார்
கோவை சூலூர் அருகே வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கார்த்தி, மோகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மகளின் உடலைத் தன்னிடம் காட்டாமல் எரித்து விட்டதாக கணவர் மீது சிறுமியின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் தாய் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “எனது குழந்தையின் மரணத்தில் உள்ள உண்மைகளைக் கண்டறிய எதிர்காலத்தில் உடலைத் தோண்டி எடுத்து பரிசோதிக்க வேண்டிய தேவை வரலாம் என்பதால், உடலைப் புதைத்திருக்க வேண்டும்.
ஆனால், உடற்கூராய்விற்குப் பிறகு மகளின் உடலை என்னிடம் காட்டவில்லை. முதலமைச்சரிடம் இருந்து முறையான நீதி மற்றும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பற்றிய உறுதி கிடைக்கும்வரை உடலை வாங்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தோம்.
ஆனால் போலீசார் மற்றும் அதிகாரிகள் குழந்தையின் தந்தையை மட்டும் தனியாக அழைத்து சென்று அவரிடம் கையெழுத்து வாங்கி உடலை அவசர அவசரமாக எடுத்து சென்று எரித்து விட்டனர்.

தாயின் மதுப்பழக்கம் மற்றும் கவனக்குறைவு தான் குழந்தையின் மரணத்திற்குக் காரணம் என்று பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய். நீதி கேட்டு போராடியதால் என் மீது பழிபோட்டு திசை திருப்ப பார்க்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னையை இப்போது எனக்கு எதிராக திசை திருப்புகிறார்கள். கைது செய்யப்பட்ட கார்த்தியின் இரண்டாவது மனைவி எனக்கூறப்படும் பெண்ணுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது.
அவர் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். குழந்தையின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான தண்டனை தர வேண்டும்” என்றார்.



















